அழித்தவன் ஒன்றாய் நிற்கிறான், சிதறுண்டுபோவோமோ யாம்…?
அழித்தவன் ஒன்றாய் நிற்கிறான்,
அழிந்தவன் வீழ்ந்துகிடக்கிறான்…
வழிந்தோடிய குருதி இன்னும் காயாமல்
வடிந்தோடிக்கிடக்கிறது நிலமெங்கும்,
வழிதடுமாறிய மாக்களாய் நம்மண்ணில்
நாளும் பிறக்கிறார் நம்மக்கள்…
ஒன்றாய் நிற்போமென்றால் முகம் சுழிக்கிறாய்…
ஒருவராய் நடப்போமென்றால் விலகிச்செல்கிறாய்…
ஒற்றுமைபற்றிக் கதைக்கும்போதே
ஓரம்கட்ட நினைக்கிறாய்…
ஒருநிலமக்களாய்ச் சேரமறுக்கிறாய்
ஒருதாய் பிள்ளைகளாய் வாழமறுக்கிறாய்
ஒத்துநின்று கடமையேற்க ஏனோ மறுக்கிறாய்…
ஒவ்வொன்றாய்ப் பலமிழந்து ஒடுங்கிக்கிடக்கிறாய்…
ஒன்றோடொன்று சேராமல் இன்னொன்றாகிறாய்…
ஒருவருக்கொருவர் புறம்சொல்லிப் புலம்பித்திரிகிறாய்…
ஒளியிழக்கிறாய், தேடும் வழியிழக்கிறாய்
துளியளவும் துன்பம் மாறாமல் துவண்டு கிடக்கிறாய்…
குழியிலே விதைத்த தெய்வங்களை நினைந்தேனும், வழியமைப்பாய் நின் வாழ்வை மீட்டிடுவாய்…
வழிகாட்டியவர் ஒரே தலைவன்
வீழ்ந்துகிடப்பவள் நம்மெல்லோர்க்கும் தாய்,
விலங்கோடு நிற்கிறார் தம்மக்கள்
ஒளியேற்ற ஏனடா மானிடா உனக்குள் ஒற்றுமையில்லை…,
அந்த ஒன்று வராதவரை சிந்திக்கிடந்து
சிதறுண்டுபோவோமோ யாம்…?
-காந்தள்-