தேசியத் தலைவரும்! – உளவியல் நடவடிக்கையும் | பாகம் 07
(கார்த்திகை திங்கள் வீரன்)
இந்திய படைகளின் வதந்தியும் – தமிழின துரோகிகளின் விசுவாசமும்!
தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சில வெற்றிகரமான உளவியல் நடவடிக்கைகள் பற்றி கடந்த நாட்களாக பார்த்து வருகின்றோம். தலைவர் பிரபாகரனால் மிக மிகத் திறமையாக திட்டமிட்டு மேற்கொண்டிருந்த பல உளவியல்; நடவடிக்கைகளையும் கடந்து இந்தியா விடுதலைப்புலிகளோடு மோதி மூக்குடைபட்டு போன நேரத்தில் இயலாமையால் மேற்கொண்ட பொய்ப்பிரச்சார உளவியல் நடவடிக்கைகள் பற்றியும் அதனை விடுதலைப்புலிகள் எவ்வாறு தகர்த்தார்கள் என்பது பற்றியும்தான் தொடர்ந்து பார்க்க இருக்கின்றோம்.
1987ம் ஆண்டியின் இறுதிப் பகுதிகளிலும், 1988ன் ஆரம்பப் பகுதிகளிலும் வன்னிக்காட்டில் தலைவர் மறைந்து தங்கியிருந்து, இந்திய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிரான போராட்டத்தை நெறிப்படுத்திக்கொண்டிருந்த காலப்பகுதியில், தலைவருக்கு எதிராக இந்தியத் தரப்பினரால் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகளை எதிர்கொள்வதுதான் விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டில் பெரிய கஷ்டமான ஒரு விடயமாக இருந்தது. வன்னிக் காட்டில் புலிகளின் தளபதிகள் சகிதமாகத் தங்கியிருந்த தலைவரை நெருங்கமுடியாமல் தவித்த இந்தியப் படையினரும், இராஜதந்திர ரீதியாக பாரிய பின்னடைவை கண்டு வந்த றோ அமைப்பினரும் திட்டமிட்டே பல வதந்திகளை கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள்.
ஆற்றாமை காரணமாகவும், ஆதங்கம் காரணமாகவும், இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழின துரோக ஆயுதக்குழு உறுப்பினர்களும் புலிகளுக்கு எதிரான பல வதந்திகளைக் கட்டவிழ்த்து விடுவதில் இந்தியர்களுக்கு சற்றும் சளைக்காமல் முன்நின்றார்கள். 24 மணி நேரத்திற்குள் புலிகளை தோற்கடித்துவிடுவோம் என்று கூறி களம் இறங்கிய இந்தியப் படையினரால், தமது முழுப் பலத்தையும் உபயோகித்தும் கூட புலிகளை வெற்றிகொள்ள முடியவில்லை என்பதை அவர்களால் ஜீரனித்துக்கொள்ள முடியவில்லை.
அவர்கள் களத்தில் எதிர்கொண்ட தோல்விகளை ஓரளவு சமாளிக்க அவர்களுக்கு பெரிதும் உதவிய ஒரு முக்கிய ஆயுதம் வதந்திதான். எந்த குறையும் வைக்காமல் தம்பாட்டிற்கு பல கட்டுக்கதைகளை அவர்கள் கட்டி வந்தார்கள்.
மற்றொரு நோக்கத்தை அடிப்படையாக வைத்தும் இந்தியப் படையினர் புலிகளுக்கு எதிரான வதந்திகளைப் பரப்பி வந்தார்கள். அதுதான் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான உளவியல் யுத்தம். அபாண்டமான வதந்திகளை மக்கள் மத்தியில் தாராளமாகப் பரப்புவதுதான், புலிகளுக்கு எதிரான பிரதான உளவியல் போர் என்று நினைத்தக்கொண்டு, இந்தியத் தரப்பினர் காரியம் ஆற்றிக்கொண்டிருந்தார்கள்.
பாரிய இழப்புகளின் மத்தியில் இந்தியப் படையினர் நித்திகைக் குள முற்றுகையை முடித்துக்கொண்டு, வெறும் கைகளைப் பிசைந்தபடி திரும்பிக்கொண்டு இருக்கையில், ஒரு வதந்தி கனகச்சிதமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
“பிரபாகரனின் முகாமை இந்தியப் படையினர் சுற்றி வளைத்து, பிரபாகரனைப் பிடிக்கும் தறுவாயில், புதுடில்லியில் இருந்து ஒரு உத்தரவு வந்தது. பிரபாகரனை எதுவும் செய்யவேண்டாம் என்பதே அந்த உத்தரவு. இதனால்தான் இந்தியப் படையினர் ஒன்றும் செய்யாமல் திரும்பவேண்டி ஏற்பட்டது” – இதுதான் அந்த வதந்தி.
இந்தியப் படையினரின் இயலாமைக்கு இப்படி ஒரு காரணம் கூறப்பட்டது. அதுவும் இந்தக் காரணத்தை இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழின துரோகிகளும்தான் கட்டவிழ்த்துவிட்டிருந்தார்கள். எங்கே இந்தியப் படையினர் மண் கௌவிய விடயம் மக்களுக்கு தெரிந்துவிட்டால், இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கி வந்த தங்களது ‘பெயரும்’ அடிபட்டுப்போய்விடுமோ என்கின்ற அச்சத்தில், தமிழின துரோக இயக்க உறுப்பினர்கள் இப்படி ஒரு கட்டுக்கதையைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.
அதாவது தலைவர் பிரபாகரன் அவர்களுடைய உயிருக்கு ஊறு நேருவதை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை என்பதால், தலைவரைக் கைது செய்வேண்டாம் என்று படையினருக்கு உத்தரவிடப்பட்டதாக அவர்கள் கதை பரப்பியிருந்தார்கள்.