ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் – பாகம் 17
எனது அனுபவம் 1982-1989
தாயக விடுதலை நோக்கிய பயணத்தின் (பகுதி 17)*
மூன்றாவது நாள், அன்றும் காலை 4.45க்கு எழுந்து நிலையெடுப்பில் இருந்து பின் உணவு என்று வழமைபோல் பொழுது போய்க்கொண்டிருந்தது, இருந்தும் போராளிகள் மற்றும் எங்கள் எல்லோர் மத்தியிலும் ஓர் வித்தியாசமான உறக்க நிலையே காணப்பட்டது.
மறுநாள் காலை 7 மணியளவில் ஏரியாவிற்குப் போன போராளிகள் வந்தனர் அவர்கள் பல புதிய உறுப்பினர்களைக் கூட்டி வந்தனர். அவர்கள் மூதூர் சம்பூர் உப்பாறு ஆலங்கேணி ஈச்சந்தீவு என்று பல இடங்களிலும் புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்கள் 22 பேரை அழைத்து வந்தனர். அவர்களையும் எங்களுடன் சேர்த்து விட்டனர். பின் மதிய உணவு முடிந்ததும் எங்களை பொறுப்பாளர் வரதண்ணா அழைத்துப் பேசினார். உங்களுக்குப் பெயர் சூட்டப் போகிறோம் என்றார்.
ஆமாம் அன்று எங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டது. 09.04.1989 ம் ஆண்டு. அந்த நாள் நான் புதிதாகப் பிறந்ததாக உணர்ந்தேன். எனக்கு அழகான உன்னதமான பண்பான பெயர் சூட்டினார் வரதன் அண்ணா. அந்த நாள் அந்தத் தருனம் நான் எனது வாழ்வின் சகல இன்ப துன்பங்களையும் மறந்து ஒரு புதிய மனிதனாக எழுந்து நின்றேன். பின் சகலரிடமும் வாழ்க்கை வரலாற்று குறிப்புக்களைப் பதிவு செய்தார்கள்.
அதன் பின்னர் புதிய உறுப்பினர்கள் அனைவரையும் 7 பேர் கொண்ட அணிகளாகப் பிரித்து சீனியர் போராளிகளை ஒவ்வொரு அணிக்கும் பொறுப்பாளராக நியமித்து எல்லாக் கொட்டில்களிலும் பிரித்து விட்டனர். மாலையானதும் உணவு உண்டபின் சென்றி போட்டு தூங்கினோம். மறுநாள் காலையும் வழமைபோல் நிலையெடுப்பு உணவு என்று போனது.
மதியம் உணவு முடிந்த பின் எல்லாப்போராளிகளுக்கும் கலந்துரையாடல் நடந்தது எங்களைத் தவிர்த்து. அதன் பின் ஒரு பெரிய போராளிகளின் அணி ஒன்று தங்கள் உடைமைகளுடன் எங்கோ போவதற்குத் தயாரானார்கள். பிற்பகல் 2 மணியளவில் வரதண்ணா எங்களிடம் வந்து உங்கள் சகல உடைமைகளையும் எடுத்து வைத்து தயார் நிலையில் இருங்கள் என்றார். எங்களுக்கோ மீண்டும் இராணுவம் காடுகளில் இறங்கி விட்டார்களோ என்ற ஒரு பயம் வந்துவிட்டது. இது தொடர்பாக நாங்கள் யாரிடமும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டாலும் அவர்கள் எந்த பதிலும் சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் நாங்கள் புதிய உறுப்பினர்கள் முடியாது என்று ஓடியும் விடலாம். ஓடினால் இரகசியங்கள் எதிரிக்குப் போய்விடும் என்பதால். எந்த ஒரு வேலையையும் இரகசியமாகவே கையாண்டார்கள்.
மாலை 4 மணியளவில் தேனீர் அருந்திய பின் எங்களை புறப்படத் தயாராகுமாறு பணித்தனர். நாங்கள் தயாராகியதும் ஏற்கனவே சீனியர் போராளிகளில் தயார் நிலையில் இருந்தவர்களும் ஒன்று கூடினோம். பின் வரதண்ணா வந்து எங்களுக்கு அறிவுரைகள் கூறினார். நீங்கள் பயிற்சி முகாமிற்குப் போகின்றீர்கள் என்றும் அந்த முகாமிற்குப் போகும் பாதைகள் மிகவும் ஆபத்தானது என்றும் சீனியர் போராளிகளின் வழிகாட்டலை ஏற்று அவர்கள் சொல்வதுபோல் நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
அதன்பின் மாலை 4.30 மணிக்கு அந்த முகாமிலிருந்து எமது பயிற்சி முகாம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியதும் மனதிற்குள் ஒருவிதமான வேதனையாக இருந்தது. ஏன் அந்த வேதனை என்று இன்றுவரை எனக்குப் புரியவே இல்லை. நான் இங்கு வந்த பின்னர் எனது அப்பா அம்மா சகோதரர்கள் அனைவரையும் மறந்து விட்டேன். அவர்களின் நினைப்பு எனக்கு வந்தது இல்லை. (நான் வந்த பின்னர் எனது தந்தைக்கு நடந்த கொடூரங்கள் பற்றி பின்னர் விபரமாக எழுதுகிறேன்).
மாலை புறப்பட்டோம் காரிருள் கவரத்தொடங்கியது வெளிச்சங்கள் ஒன்றும் இல்லை அது பெரும் காட்டுப் பாதை முன்னால் போகும் நபரைக்கூட காண முடியாது அப்படி இருள் எல்லோர் கையிலும் மின் விளக்குகள் டோர்ச்லைட் இருக்கின்றது ஆனால் அதைப் பயன்படுத்த முடியாது முன்னால் போகும் போராளி (கொம்பாஸ்) திசையறிகருவியின் உதவியுடனே செல்கிறார் சூரைமுள் என்னும் மரம் உள்ளது அது விருப்பம் போல் முகத்தையும் கை கால்களையும் பதம் பார்த்து விட்டது. ஒருவரை ஒருவர் பிரிந்து விடாமல் இருக்க முன்னால் போபவரை பின்னால் வருபவர் அவரது தோளில் அல்லது அவரது சேட்டை லேசாகப் பிடித்துச் செல்ல வேண்டும் இல்லை என்றால் காட்டிற்குள் தொலைந்து விடுவோம்.
இப்படியே சென்று இரவு 8 மணியளவில் திருகோணமலை அனுராதபுரம் பிரதான வீதியைக் கடப்பதற்காக பன்மதவாச்சி என்னும் இடத்தில் வந்து நின்றோம். 10 நிமிடங்கள் அவதானித்து விட்டு பின் போராளிகளில் சிலர் வீதியில் பிரச்சினை ஒன்னும் இல்லை என்று உறுதிப்படுத்தி விட்டு வந்தனர். அதன் பின் எல்லோரும் வீதியைக் கடந்து சென்றோம். அந்தப் பகுதி மிகவும் அடசல் காடாக இருந்தது சிலருக்கும் தெரிந்திருக்கும் அப்படி ஒரு காடு அது. ஆனால் பிரச்சனை இல்லை என்னவென்றால் வீதியைக் கடந்துவிட்டோம் என்ற ஒரு மன நின்மதி.
அப்படியே (நைட் மூவ்) இரவு நகர்வில் சென்று கொண்டிருந்தோம் அந்த அடசல் காடு எங்களை வரவேற்கிறதா அல்லது தங்களின் பகுதிக்குள் நாங்கள் புகுந்து விட்டோம் என்று கோபத்தில் எங்களைக் கிழிக்கின்றதா என்றே புரியவில்லை அந்தளவிற்கு எங்களைப் பதம் பார்த்து விட்டது. தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தோம் எனது கண் இமைக்கு மேலே ஒரு முள் கிழித்து விட்டதால் சரியாகப் பார்க்க முடியாமல் இருந்தது. கண்ணில் இரத்தம் கசியத் தொடங்கியது. பார்த்தும் பிரயோசனமில்லை கண்ணை மூடினாலும் இருள்தான் திறந்திருந்தாலும் இருள்தான். இருளின் பயணம் தொடரும்…
நன்றி.
வே. சுபாஸ் தமிழீழம்.
பாகம் 01 பார்வையிட
பாகம் 02 பார்வையிட
பாகம் 03 பார்வையிட
பாகம் 04 பார்வையிட
பாகம் 05 பார்வையிட
பாகம் 06 பார்வையிட
பாகம் 07 பார்வையிட
பாகம் 08 பார்வையிட
பாகம் 09 பார்வையிட
பாகம் 10 பார்வையிட
பாகம் 11 பார்வையிட
பாகம் 12 பார்வையிட
பாகம் 13 பார்வையிட
பாகம் 14 பார்வையிட
பாகம் 15 பார்வையிட
பாகம் 16 பார்வையிட