விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும் – பாகம் 2

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:01

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும் – பாகம் 2

மனிதர்கள் தமது விருப்புகள், அபிலாசைகளுக்கு அமைவாகச் சுயாதீனமாக வாழும் உரிமைதான் சுதந்திரமென அவர் கருதினார்.

வெளி அழுத்தங்களிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை பெறும்பொழுதுதான் உண்மையான சுதந்திரத்தை மனிதர்கள் சுகிக்க முடியும் என்றும் பிரபாகரன் நம்பினார். சுதந்திரம் என்ற இந்த உன்னதமான வாழ்வியல் விழுமியத்தை அடைவதற்கு, சில சூழ்நிலைகளில் பெரும் தியாகங்கள் புரிந்து, அர்ப்பணிப்புகள் செய்து போராடுவது அவசியம் என்றும் அவர் சிந்தித்தார். இளம் புரட்சிவாதியான பிரபாகரனுக்குச் சுதந்திரம் என்பது இதய பாசமாயிற்று. சுதந்திரத்திற்காகப் போராடுவது என்பது தணியாத தாகமாயிற்று. பள்ளிப் படிப்பு பிரபாகரனை வெகுவாகக் கவரவில்லை. மானிட சுதந்திரம் பற்றியும், சுதந்திரத்தை அடையமனிதர்கள் தொடுத்த போராட்ட வரலாறு பற்றியும் நிறையக் கற்றறியவேண்டும் என்பதே இளம் பிரபாகரனின் வேட்கையாக இருந்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கொந்தளிப்பான வரலாறு பிரபாகரனை வெகுவாகக் கவர்ந்தது. அக்காலத் தமிழ் அரசியல்வாதிகள் மகாத்மா காந்தியை வழிபட்டனர். காந்திஜியின் அகிம்சைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சாத்வீகப் போராட்ட முறையைத் தழுவினர். பிரித்தானிய குடியேற்ற ஆட்சிக்கு எதிராக வன்முறைப் போர்தொடுத்த சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் ஆகிய கிளர்ச்சியாளரே பிரபாகரனை வெகுவாகக் கவர்ந்தனர். ஆங்கில ஆட்சியாளருக்கு எதிராகத் தலைமறைவுத் தாக்குதல்களை நடத்திவந்த சீக்கிய இளம் புரட்சிவாதியான பகத்சிங்கை விட சுபாஸின் விடுதலைப் போராட்ட வரலாறே பிரபாகரனை வெகுவாக ஈர்த்தது. பிரித்தானியருக்கு எதிராக இந்திய தேசிய விடுதலையை வென்றெடுக்க ஆயுதப் போராட்டமே உகந்த வழியெனக் கருதி, ஒரு தேசிய விடுதலை இராணுவத்தைக் கட்டியெழுப்பி சுபாஸின் துணிச்சலைப் பெரிதும் மதித்த இளம் பிரபாகரன், அந்த இந்திய சுதந்திர வீரனின் வாழ்க்கை பற்றியும் சிந்தனை பற்றியும் நிறைய வாசித்தார். சுபாஸின் பிரசித்தி பெற்ற உரைகள் இவருக்கு ஊக்கத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்தன. மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும் பிரபாகரன் படிக்கத் தவறவில்லை .

காந்திஜியின் அகிம்சைத் தத்துவத்தின் அடிநாதமாக விளங்கிய ஆன்மீக அறநெறிப் பண்புகளுக்கு அவர் மதிப்பளித்தபோதும், அவை தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பொருத்தமாக அமையுமா என்பதில் பிரபாகரனுக்கு ஆழமான ஐயப்பாடு இருந்தது. சிங்கள இனவாத அரசின் ஈவிரக்கமற்ற அடக்குமுறைப் போக்கு அகிம்சைவாத அறநெறிப் பண்புகளுக்கு மதிப்பளிக்கப் போவதில்லை என்பதைத் தமிழரின் அரசியல் வரலாற்றிலிருந்து பிரபாகரன் ஏற்கனவே அறிந்து கொண்டார். இந்தியக் காவியமான மகாபாரதம் இள புரட்சிவாதியான பிரபாகரனை மிகவும் கவர்ந்தது. மகாபாரதத்தை தீய சக்திகளுக்கு எதிரான ஒரு தர்ம யுத்தமாகக் கண்ட பிரபாகரன், ஈற்றில் தர்மமும் சத்தியமுமே வெற்றி கொள்ளும் என்ற மெய்யுண்மையை இக்காவியம் வாயிலாகத் தெளிந்து கொண்டார்.

வரலாறு படைத்த தமிழ்ப் பேரரசுகள் பற்றியும், தமிழ்ச்சக்கரவர்த்தியின் வீரம்செறிந்த வரலாறுகள், படையெடுப்புகள், போர்கள் பற்றியும் பிரபாகரன் நிறைய வாசித்தார். தமிழரின் பெருமை மிக்க வரலாறுகள் அவருக்குப் புத்துணர்வை அளித்தன.

அந்நிய குடியேற்ற ஆட்சிக்கு எதிராகத் துணிச்சலுடன் ஆயுத வன்முறைப் போரில் குதித்த இந்திய விடுதலை வீரர்களது வாழ்வும் புரட்சிகர சிந்தனையும் இளம் பிரபாகரனை ஆழமாகப் பாதித்தது. பண்டைத் தமிழ் இனத்தின் பழம்பெரும் நாகரீகமும், வீரம்செறிந்த வரலாறும் அவருக்குப் பெருமிதம் அளித்தன. இளம் வயதிலேயே இவற்றையெல்லாம் படித்தறிந்த பிரபாகரன், ஒடுக்கப்பட்டு வாழும் தனது மக்களின் விடுதலைக்காகத் தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துப் போராட உறுதியூண்டார். கொடூரமான ஒரு அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் போர்தொடுக்கும் ஒரு புரட்சிவாதி எதிர்கொள்ள வேண்டிய பேராபத்துகள் பற்றிப் பிரபாகரன் உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.
ஆயினும் தேச விடுதலை என்ற பொதுவான தர்மத்திற்காகச் சாவைத் தழுவவும் அவர் தயாராக இருந்தார்.

பதினாறு வயதிலேயே அரசினால் தேடப்பட்டு, தப்பி ஓடித்திரியும் தலைமறைவு வாழ்வை வரித்துக் கொள்ளவேண்டிய அவல நிலை பிரபாகரனுக்கு ஏற்பட்டது. அதுவும், இரகசிய காவல்துறையினரின் கண்துஞ்சாக் கண்காணிப்பு இவரது சொந்தக் கிராமம்மீது திருப்பப்பட்டு, நள்ளிரவுகளில் இவரது வீடு சுற்றிவளைப்புகளுக்கு இலக்காகியதைத் தொடர்ந்து, தலைமறைவு வாழ்வும் நெருக்கடியானதாக மாறியது.

கைது செய்யப்படுவதைத் தடுக்க குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்து வாழவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. தங்குவதற்கு வதிவிடமின்றி நாளுக்கு நாள் அங்குமிங்குமாக அலைந்து திரிவதும், பகலில் பதுங்கி ஒளிந்திருந்து இரவில் மட்டும் நடமாடுவதுமான ஒரு நாடோடி வாழ்க்கை. நிம்மதியாகத் தூங்குவதற்கு வாய்ப்புமில்லை வழியுமில்லை. இந்துக்கோவிலுள்ள மடங்கள், தேர்கள், கூரைகள், அனாதரவாக விடப்பட்ட பாழடைந்த வீடுகள், காய்கறித் தோட்டங்கள் இப்படியாக அந்தந்த வேளைக்குத் கிட்டும் இடங்களில், அதுவும் சில மணிநேரம் மட்டும் தூங்குவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று என்னிடம் ஒருதடவை தனது

நாடோடி வாழ்க்கைபற்றி விபரிக்கும்போது பிரபாகரன் சொன்னார்.
பசிவதை அவரை சதா உறுத்தியது. சில சமயங்களில் முழு நாளாகப் பட்டினி கிடந்து துன்புற வேண்டியிருந்தது. பசி தாங்க முடியாமல், சில இரவுகளில் காய்கறித் தோட்டங்களுக்குள் நுழைந்து மரவள்ளிச் செடியைப் பிடுங்கி, கிழங்குகளைத் தோண்டியெடுத்து, பச்சையாகப் பச்சை மிளகாயுடன் சேர்த்து உண்ணும்போது அமிர்தமாக இருக்குமென என்னிடம் சொன்னார். இளம் போராளியாக விடுதலைப் பாதையில் காலடி வைத்த காலத்திலிருந்தே பசியின் உபாதைக்குப் பழகிக் கொண்டார் பிரபாகரன். தணியாத இலட்சியப் பசி பிரபாகரனின் வயிற்றுப் பசிக்குத் தீனி போட்டது. இளம்பிராயத்தில் அனுபவித்த இடர்கள், துன்பங்கள், அவர் எதிர்கொண்ட சோதனைகள், சவால்கள், ஆபத்துக்கள் எல்லாமே அவரது இலட்சிய உறுதிக்கு உரமூட்டின.

தனி மனிதனாக நின்று தலைமறைவு வாழ்க்கையை வரித்துக்கொண்டு பிரமாண்டமான அரச அடக்குமுறை யந்திரத்தை எதிர்த்து நின்ற இளம் புரட்சிவாதியான பிரபாகரனுக்கு, செம்மையாகத் திட்டமிடப்படாது தனித்தனிச் சம்பவங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வந்த அரசியல் வன்முறைச் செயல்கள் அர்த்தமற்றவையாகப் புலப்பட்டது, இவை தமிழரின் அரசியல் போராட்டத்தை முன்நகர்த்தப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டார்.

இவரோடு சமகாலத்தில் அரசியலில் ஈடுபட்டவர்கள் ஒருவர்பின் ஒருவராகக் காவல்துறையினரால் கைதாகி சிறையில் வாடிக்கொண்டிருந்தார்கள். தனி நபர்களால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட வன்முறை நடவடிக்கைகளும் செம்மையாக ஒழுங்கமைக்கப்படாமல் தேர்ச்சியின்றிக் கையாளப்பட்டதால் அவை பிசுபிசுத்துப் போனதையும் இவர் கண்டறிந்து கொண்டார். தீவிரவாத இளைஞரின் அரசியல் வன்முறைப் போராட்ட நடவடிக்கைகளை ஆழமாகப் பார்த்தபோது, அவை ஏற்படுத்திய எதிர்மறையான அரசியல் விளைவுகளையும், அதனால் தீவிரப்படுத்தப்பட்ட அரச ஒடுக்குமுறையின் பாதிப்புகளையும் அவர் உணர்ந்து கொண்டார்.

இவற்றிலிருந்து பிரபாகரனுக்கு ஒரு உண்மை தெட்டத் தெளிவாகப் புரிந்தது. ஒழுங்கமைவான ஆயுதப்போராட்ட வழிமுறை வாயிலாக, தேசிய விடுதலையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு புரட்சிகர அரசியல் அமைப்பு அவசியமானதும் வரலாற்றுத் தேவையானதும் என்பதை அவர் புரிந்து கொண்டார். ஆயுதப் போராட்டத்திற்கு அத்தியாவசியமான ஒரு தலைமை, வழிகாட்டல், ஒழுங்கமைவான கட்டமைப்பு ஆகியவற்றை மாணவர் பேரவைத் தலைவர்கள் வழங்குவார்கள் என்று பிரபாகரன் நம்பியிருந்தார். ஆனால் இப்புரட்சிகரப் பணியை மேற்கொள்வதில் இந்தத் தலைவர்கள ஈடுபாடு காட்டாததால் இவருடைய எதிர்பார்ப்பு தவிடுபொடியாயிற்று. பேரவைத் தலைவர்கள் கைதாகிச் சிறைப்படுத்தப்பட பேரவையும் செயலிழந்து செத்துப் போனது.

இதனால் உருவாகிய அரசியல் வெற்றிடத்தையும் அதேவேளை தீவிரமாகிச் செல்லும் அரச ஒடுக்குமுறைச் சூழலையும் எதிர்கொள்வதற்கு, புரட்சிகர அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டிய அவசியத் தேவை நிலவியது. இங்கே ஒரு முக்கிய தீர்மானத்துக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் பிரபாகரனுக்கு ஏற்பட்டது. தனது தலைமையின் கீழ் ஆயுதம் தரித்த அமைப்பு ஒன்றை நிறுவுவதென, இறுதியில் அவர் தீர்மானித்தார். இத்தகைய வரலாற்றுச் சூழலிலேயே 1972இல் தமிழ்ப்புலிகள் இயக்கம் வரலாற்று ரீதியாகப் பிறப்பு எடுத்தது. இதன் ஆரம்பத்தின்போது புதிய தமிழ்ப் புலிகள் என்று அவ்வமைப்பு தன்னை அழைத்துக் கொண்டது. பின்னர் 1976 மே 5 அன்று அதன் உறுப்பினர்கள் தம் அமைப்பின் பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மீளப் பெயர் சூட்டிக்கொண்டார்கள்.

ஆரம்பத்தில் புலிகள் இயக்கம், ஒரு நகரப்புற கெரில்லா அலகாகத் தனது கட்டமைப்பை நிறுவிக்கொண்டது. மிக உயர்ந்த அர்ப்பணிப்பும், இலட்சிய உறுதிப்பாடும் கொண்ட இளம் போராளிகளைப் பிரபாகரன் தனது அணியில் அரவணைத்துக் கொண்டார். தலைமைக்கு விசுவாசமானவர்களாகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது உயிரையே ஈகம் செய்யத் தயாரானவர்களாகவும் புலி உறுப்பினர்கள் விளங்கினர். தேச விடுதலை என்ற அரசியல் இலட்சியத்திற்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்து, மிகக் கண்டிப்பான ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் கோவையைக் கடைப்பிடித்த விடுதலைப் புலிகள் ஆரம்ப காலத்தில் ஒரு தலைமறைவு அமைப்பாகவே விளங்கினர்.

தொடக்கத்தில், கெரில்லாப் போரியல் முறையிலான ஆயுதப்பேராட்ட வடிவத்தையே பிரபாகரன் தேர்ந்தெடுத்தார். தமிழீழ மண்ணின் களநிலை யாதார்த்த சூழலுக்குக் கெரில்லாப் போராட்ட முறையே சாலச் சிறந்த ஆயுதப் போர்வடிவம் என்பது அவரது கணிப்பு. ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் குடியேற்ற வல்லரசுகளின் அடக்கு முறைக்கு எதிராக நிகழ்த்தப் பெற்ற ஆயுதப் போராட்ட வரலாற்று அனுபவங்களிலிருந்து கற்றுத்தேறியவற்றை ஆதாரமாகக் கொண்டே கெரில்லாப் போரியல் வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார் பிரபாகரன். ஒரு நவீன அரசின் ஒழுங்கமைவான இராணுவ பலத்தை, பலம்குறைந்த ஒரு சிறிய ஒடுக்கப்படும் இனம் எதிர்கொண்டு போராடுவதாயின் கெரில்லா வடிவப்போரியல் முறையே மிகப் பொருத்தமானது என அவர் முடிவு செய்தார்.

தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தின் ஆயுதக் கிளர்ச்சி சந்தித்த படுதோல்வியானது புரட்சிக் கலை சம்பந்தமாக ஒப்பற்ற பாடங்களைத் பிரபாகரனுக்குப் புகட்டியிருந்தது. உலகத்தின் வேறு பகுதிகளில் வெற்றியீட்டிய விடுதலைப் போராட்டங்களையும் அவற்றின் போரனுபவத்திலிருந்து வகுக்கப்பட்ட போரியல் கோட்பாடுகளையும் உத்திகளையும் கண் மூடித்தனமாக இலங்கையின் புறநிலைக்கு நடைமுறைப்படுத்த முடியாதென்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். எமது சூழ்நிலையில் நிலவும் உள்ளூர் கள யதார்த்தம் மற்றும் அரசியல் வரலாற்றுப் புறநிலைகள் கவனத்திற்குக் கொள்ளப்பட வேண்டும். ஆயுதங்களைக் கையாள்வதற்கான பயிற்சியும் மற்றும் போரியல் முறைகளும் தெரிந்திருப்பதன் அவசியத்தையும் அவர் உணர்ந்திருந்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டபோதும் தமது போராளிகளுக்குத் தகுந்த பயிற்சி அளிப்பதிலும் தமிழ்ப் பகுதிகளில் தலைமறைவு அலகுகளை அமைப்பதிலும் பிரபாகரன் நீண்ட காலத்தை ஒதுக்கினார்.

வெளிநாடுகளில் ஆயுதப் பயிற்சி பெறுவதை அவர் விரும்பவில்லை . லெபனானில் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஆதரவின் கீழ் ஆயுதப் பயிற்சிக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது அதனைப் பிரபாகரன் நிராகரித்துவிட்டார். உள்ளூர் களத்திலேயே போராட்டத்திற்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதால் அக்களத்திலேயே பயிற்சியை அளிப்பது சாலச்சிறந்தது என அவர் கருதினார். பொருத்தமான உத்திகளையும் நன்கு சிந்தித்து, செம்மையாகத் திட்டமிடப்பட்ட தந்திரோபாயப் போர் நடவடிக்கைகளையே பிரபாகரன் வலியுறுத்துவார்.

உணர்ச்சிவசப்பட்டு, முரட்டுத் துணிச்சலோடு சாதனை புரிந்து காட்டவேண்டுமென அவசரப்பட்டுச் செயற்படுவதை அவர் அறவே விரும்பவில்லை. புலிகள் இயக்கம் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்தே போராளிகளதும் அமைப்பினதும் பாதுகாப்பில் அவர் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். அரச காவல்துறையினர், உளவாளிகள், காட்டிக் கொடுக்கும் துரோகிகள் ஆகியோருக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே ஆயுத வன்முறைத் தாக்குதல்களை நடத்திய போதும் இயக்கத்தின் இருப்பைப் பல வருடங்களாக இரகசியமாகவே வைத்திருந்தார் பிரபாகரன்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சில ஆயுத வன்முறை நடவடிக்கைகளுக்கு 1978 ஏப்ரல் அன்றே விடுதலைப் புலிகள இயக்கம் உரிமை கோரியது.
விடுதலைப் புலிகளது கெரில்லா முறையிலான ஆயதப் பேராட்டத்தின் தோற்றமானது, தமிழரது தேசியப் போராட்டத்தில் ஒரு புதிய வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. மக்கள் ஆதரவுபெற்ற ஆயுதப் போராட்டமாக அதன் பரிமாணம் விரிவடைந்தது. அரசியல் இராணுவக் கட்டமைப்புகளைக் கொண்ட விடுதலை இயக்கமாக விரைவில் புலிகள் இயக்கம் உருவகம் பெற்றது. சாத்வீக அரசியல் போராட்டங்களில் நம்பிக்கை தளர்ந்து, ஆயுதப் பேராட்டம் வாயிலாக அரச அடக்குமுறையை எதிர்க்க வேண்டுமென விரும்பிய தமிழ் இளம் புரட்சிவாதிகளின் அபலாசைகளுக்குப் புத்துயிரூட்டும் வகையில் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பும் செயற்பாடும் அமையப்பெற்றன.

மிகவும் நுட்பமான முறையில் போர்த் திட்டங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்து, எதிரியை வியக்கச் செய்யும் வகையில் அவற்றை நடைமுறைப்படுத்திய பிரபாகரன், விரைவிலே தமிழரின் ஆயுதம் தரித்த விடுதலைப் போரின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். அவர் கட்டியெழுப்பிய விடுதலைப்புலிகள் அமைப்பும் தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புரட்சி இயக்கமாக முகிழ்ந்தது.

அடுத்து வரும் பதிவு : தனியரசு நிறுவ தமிழ் மக்கள் கொடுத்த ஆணை

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

 

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.