ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் – பாகம் 06
எனது அனுபவம் 1982-1984
அன்று மதியம் சமைத்துச் சாப்பிட்டு விட்டு மிகுதிச்சாப்பாட்டைக் கட்டி எடுத்தோம். பிற்பகல் 2 மணியளவில் எமது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அங்குள்ள மக்கள் எவரின் கண்களிலும் படாமல் காட்டுப்பாதை ஊடாக அங்கிருந்து புறப்பட்டோம்.
எமது கிராமத்திலிருந்து நாம் போக வேண்டிய தூரம் காட்டுப்பாதையூடாக சுமார் 5 மணிநேரம் கால் நடையாக நடக்க வேண்டும். நானும் எனது அப்பாவும் எமது உடைமைகளைக் காவிக் கொண்டு சென்றோம். அந்தக் காட்டுப்பாதை எங்கிலும் யாணை மற்றும் கரடிகளின் மலக்கழிவுகள் காணப்பட்டது. அப்பாவிற்கு நல்ல காட்டு அனுபவம் இருந்தது. பிரச்சனைகள் வருவதற்கு முன்பு எம்மிடம் வேட்டைத்துப்பாக்கி இருந்தது (சொட்கன்). நாம் விவசாயக் குடும்பம். எமக்குச் சொந்தமாக 7 ஏக்கர் வயல் நிலம் உள்ளது. 1982ம் ஆண்டுக்குப் பின்னர் எம்மால் விவசாயம் செய்ய முடியாத நிலை. அப்பா காடுகளுக்குச் சென்று அப்போது மிருக வேட்டையாடி வருவார். அது வேண்டாம் பிரச்சனையாகிவிடும். அதனால் அப்பாவிற்கு கொஞ்சம் பயம் குறைவு ஆனால் எனக்கோ பயம் என்றால் விழி பிதுங்கிக் கொண்டிருந்தது. நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை சிறுவயதுதான் ஆனால் அனுபவம் இல்லை. அதுதான் பயம்.
சுமார் 2 மணிநேரம் நடந்ததும் சற்று ஓய்வு எடுத்தோம். தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் நடந்து மாலை 5.30 மணியளவில் கன்னியா என்னும் தமிழ் கிராமத்தை வந்தடைந்தோம். அங்குவந்த எங்களுக்கு பெரும் அதிர்ச்சி அங்கிருந்த மக்கள் அனைவரும் அகதிகளாக எங்கோ வெளியேறி விட்டிருந்தனர். அவர்களின் வீடுகள் பற்றைக் காடுகளாகக் காட்சியளித்தது. நாங்கள் இந்தக் கிராமத்தைத் தாண்டித்தான் சாம்பல்தீவுக்குப் போக வேண்டும்.நேரம் மாலை ஆறுமணியாகிக் கொண்டிருந்தது. இருள் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருந்தது. எப்படியும் நாம் இந்தக் கிராமத்தைத் தாண்டிப்போக வேண்டும் என்பதால் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றோம். அங்கே ஒரு வீதியைக் கடக்க வேண்டும். அந்த வீதி திருகோணமலை அநுராதபுரம் பிரதான வீதி. அந்த வீதியை நெருங்கிக் கொண்டிருக்கையில் சிங்களத்தில் கதைக்கும் சத்தம் கேட்டது. நாம் அருகிள் இருந்த பற்றைக்குள் இருந்து அவதானித்தோம். சற்றுநேரத்தின் பின் அப்பா ஒரு மரத்தின்மீது ஏறிப் பார்த்தார் அந்த வீதியெங்கிலும் சிங்களப் படையினர் பாதுகாப்பில் இருந்துள்ளனர். பின்னர் நாம் அங்கிருந்து பின்னாடி வந்து மீண்டும் காட்டுப்பகுதியில் இருந்தோம். நன்கு இருண்டபின் போகலாம் என்று.
சுமார் 8 மணியளவில் தமிழில் பேசியவாறு சிலர் வந்தனர் அவர்களை நாம் அழைத்தோம் அவர்கள் எம்மைக் கண்டு ஓடத் துவங்கிவிட்டனர். அப்பா அவர்களை பின் தொடர்ந்து சந்தித்தார். பின் நானும் அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் வேறு யாருமில்லை புளொட் குழுவினர் அவர்களிடம் 4 கைக் குண்டுகள் (கிரோனட்) மட்டுமே வைத்திருந்தனர். அவர்களிடம் நாம் உதவி கோரினோம். எங்களை இந்த வீதியைக்கடத்தி விடும்படி. அதற்கு தங்களுக்கு நேரமில்லை என்றும் நாளைக்கு இதே நேரம் இந்த இடத்திற்கு வருவோம். உங்களையும் கூட்டிக்கொண்டு போகிறோம் என்றனர். நாமும் சரி என்று அவர்களின் கதையைக் கேட்டு அன்று இரவு அந்த நடுக்காட்டில் தங்குவதற்கு முடிவெடுத்துத் தங்கினோம்.
காட்டு வீதி அருகே ஒரு அருவி இருந்தது. அதில் தண்ணீர் இல்லை அருவிக்குள் நெருப்பு மூட்டி இருந்து. மீதமாக இருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டோம். தண்ணீர் தட்டுப்பாடாக இருந்தது. இன்னுமொருமுறை குடித்தால் தீர்ந்து விடும். மறுநாள் இரவு வரை அங்கேயே தங்க வேண்டிய நிலை. 10 மணியளவில் நான் உறங்கி விட்டேன். அப்பா விழித்திருந்தார். பின்னர் 12 மணியளவில் கடே அதிரும் அளவிற்கு சத்தத்துடன் யாணை ஒன்று அந்தப்பாதையூடாக வந்து எமக்கு அருகில் வந்ததும் நின்று விட்டது. ஒரு சத்தமும் கேட்கவில்லை. என் கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. 2 நிமிடம் வரை எந்தவொரு சத்தமும் இல்லாமல் அந்த யானை அப்படியே நின்றதைப் பார்த்து அப்பா ஒருவிதமான சத்தம் போட்டார். அவ்வளவுதான் காடு அதிர்ந்தாற்போல் பெரும் சத்தத்துடன் யானை வந்த வழியே ஓடி விட்டது. அப்பா என்னை சமாதானப்படுத்தி உறங்கச் சொன்னார். என்னால் உறங்க முடியவில்லை. 1 மணிவரை விழித்திருந்திருப்பேன். அதன்பின் உறங்கிவிட்டேன்.
பின் அதிகாலை 4 மணியளவில் உறுமல் சத்தத்துடன் கரடி எம்மை நோக்கி வந்தது அப்பா உடனே என்னை எழுப்பி சிறு கத்தியைத் தந்தார் வைத்துக்கொள்ளுமாறு. சிலவேளை என்மீது பாய்ந்தால் அதை வெட்டும்படி கூறினார். அப்பா நீண்ட கைபிடியுள்ள கத்தியை வைத்திருந்தார். தூரத்தில் கேட்ட சத்தம் எமக்கருகில் கேட்டது. அப்பா அதை எதிர்கொள்ளத் தயார் நிலையில் நின்றார். நான் நெருப்பு வெளிச்சத்தை அதிகமாக்கி விட்டு பின்னால் நின்றேன். சற்றும் எதிர்பாக்காத நேரத்தில் திடீரென அந்தக்கரடி அப்பாமீது பாய்ந்தது. அப்பா அதை வெட்டினார். அதன் தலையில் வெட்டுக்காயம் பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.பாரிய கதறல் சத்ததுடன் ஓடியது அதன்பின்னால் இன்னொரு கரடி அப்பாமீது பாய்ந்து அவரது கையைக் கடித்து விட்டது. நான் என்னிடமிருந்த கத்தியால் அதைத்தாக்கியதும் ஓடிவிட்டது. அப்பாவிற்கு இரண்டு இடத்தில் பல்லுபட்ட காயம் இரத்தம் வரத்தொடங்கியது. பழைய சரம் ஒன்றைக் கிழித்து கட்டிவிட்டு இருந்தோம். அந்த நேரம் அப்பா என்னிடம் ஒரு கதை சொன்னார். எம்மை இந்த நிலைக்கு ஆளக்கிய சிங்களவன் ஒருவனையாவது நீ உன் வாழ்நாளில் கொன்று விட்டுத்தான் சாக வேண்டும் என்றார். அந்த நேரம் என்னையறியாமல் அழுகை வர ஆரம்பித்தது.
காலை விடிந்ததும் தண்ணீர் தேடவேண்டிய நிலை எற்பட்டது. கன்னியா இலங்கை வாழ் மக்கள் அறிந்த இடம் ஆமாம் (வெண்ணீர் ஊற்று) சுடுதண்ணீர் கிணறு அந்த இடத்திற்குப் போய் தண்ணீர் எடுத்துவர முடிவு செய்தோம். அந்த இடம் முழுவதும் பற்றைக்காடு மூடியிருந்தது. மெதுவாக பதுங்கி அந்த கிணற்றடியைச் சேர்ந்தோம். அதைப்பார்க்க முடியாத அளவிற்கு காடு மூடியிருந்தது. நான் 5 வயதாக இருக்கும் போது அதில் குளித்துள்ளேன் ஞாபகமுள்ளது. அந்த இடத்தில் 7 கிணறுகள் உள்ளது ஒவ்வொரு கிணத்திலும் ஒவ்வொரு விதமான சூடு இருக்கும். இதில் குளித்த பலர் இங்கு இருப்பார்கள். அவர்களுக்கும் தெரியும். இந்தக் கிணறு தொடர்பாக தனியாக ஒரு பதிவு செய்கிறேன்.
அங்கிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு நாம் இருந்த இடத்திற்கு மீண்டும் வந்து இருந்தோம். சாப்பாடு முடிந்து விட்டதால் பிஸ்கட்தான் அன்று முழுவதும் சாப்பாடு.
மாலையும் வந்து இரவு9 மணியும் ஆகிவிட்டது. அந்த புளோட் தேசத்துரோகக் குளு வரவேயில்லை. முதல்நாளே எங்களைப் போகச்சொல்லியிருந்தால் நாங்கள் வீதியைக் கடந்து போயிருப்போம். இந்த அவலநிலையும் வந்திருக்காது .அவர்கள் வரும் போது இராணுவம் பணிமுடிந்து போய்விட்டிருந்ததால்தான் வந்தார்கள் என்ற விசயத்தைச் சொல்லாமல் தாங்கள் கூட்டிச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.துரோகிகள்.
பின்னர் நாங்கள் இரவு பத்து மணிவரை பார்த்து இருந்துவிட்டு புறப்பட்டோம். வீதிக்கு 100மீற்றர் தூரத்திலிருந்து 10 நிமிடங்கள்வரை அவதானித்து விட்டு மெல்லமெல்ல வீதிதைக் கடந்து இரவோடு இரவாக சிறுபிட்டி என்னும் இடத்தை இரவு ஒரு மணியளவில் வந்தடைந்தோம்.
அங்கு எமது தமிழ் மக்கள் நிறையபேர் வாழ்கின்றனர். அவர்களிடம் உதவிகேட்டோம். எங்களுக்கு இரவோடு இரவாக உணவு சமைத்து தந்து அப்பாவிற்கு அங்கிருந்த ஆயுள்வேத வைத்தியரை வரவழைத்து மருந்து கட்டினார்கள். இன்றும் அதை மறக்க முடியவில்லை. மறுநாள் காலை அங்கிருந்த ஓர் பெரியவரைச் சந்தித்தோம். அவர் எங்களுக்கு சிறு குடிசையைத் தந்தார் சிலகாலம் இருக்கும்படி. சமையலுக்கு உரிய பாத்திரங்கள் அனைத்தும் தந்தார். பின் நாம் சமைத்துச் சாப்பிட்டிவிட்டு இருந்தோம்.
மாலை 5 மணியளவில் எங்களைச் சந்திக்கவென ஒரு இளைஞர் வந்தார். நாம் எமது பிரச்சினைகளைக் கூறினோம். அவர் என்னையும் அப்பாவையும் அருகில் இருந்த சிறு காட்டிற்குள் கூட்டிச்சென்றார்.
ஆமாம் என் வாழ்க்கையில் முதன் முதலில் கண்ட எமது காவல் தெய்வங்கள்.. ஒரு சிறு முகாமிட்டு பலர் இருந்தனர். சகலரும் தாடி பெரிய மீசையுடனும் பார்க்கவே பயங்கரமாக இருந்தார்கள். எம்மைக் கண்டதும் அன்போடு வரவேற்று ஆறுதல் கூறினர். அவர்களின் பொறுப்பாளர் சற்று நேரத்தில் வந்தார். அவர்தான் வேறுயாருமில்லை லெப் கேணல் சந்தோசம் மாஸ்ரர்…….
தொடரும்…….
நன்றி
வே.சுபாஸ் தமிழீழம்
17-10-2020
பாகம் 01 பார்வையிட
பாகம் 02 பார்வையிட
பாகம் 03 பார்வையிட
பாகம் 04 பார்வையிட
பாகம் 05 பார்வையிட