ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான்
எனது அனுபவம் 1982-1987 (பகுதி 09)
நானும் எனது வேலையும் என்று இருக்கும் போது வேறு ஒரு இடத்திலிருந்து எமது கிராமமான இத்தாவிலில் பலர் இடம் பெயர்ந்து வந்து குடியேறினர். அங்கு எமது வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி ஒரு குடும்பம் வந்து இருந்தனர். அவர்களுக்கு 4 பெண்பிள்ளைகளும் ஒரு ஆணும் உள்ளனர். அதில் முதலாவது பெண் மிகவும் அழகானவர். 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் எனது சகோதரிகளுடன் குறுகிய காலத்தில் நட்பை எற்படுத்தினார். அவர்கள் அனைவரும் மிகவும் சந்தோசமாக இருந்தனர்.
அந்தக் கிராமத்தில் முதன் முதலில் கிணறு வெட்டிக் கட்டியது நாங்கள்தான். தண்ணீர் எடுப்பதற்காக எல்லோரும் எமது வீட்டிற்குத்தான் வருவார்கள். இந்தப் பெண்ணும் தண்ணீர் எடுப்பதற்காக அடிக்கடி வருவார். நான் வேலை முடிந்து வீட்டிற்கு 5.30 மணிக்குத்தான் வருவேன். நான் வருவதைப் பார்த்து அந்தப் பெண் தண்ணீர் எடுக்கும் சாட்டாக வந்து எனது சகோதரிகளுடன் பேசிக்கொண்டிருப்பதுபோல் என்னையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்.
சில நாட்கள் இப்படியே நகர்ந்தது. ஒரு நாள் நான் வேலை விட்டு வரும்போது அவர் பளை பேரூந்து நிலையத்தில் நின்று என்னைக் கண்டதும் கை அசைத்துக் கூப்பிட்டார். நானும் போனேன். எனக்கோ கைகால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. அவருக்கு சின்ன வயதுதான் அப்போது 15 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். என்னால் அவருடன் பேச முடியாத அளவிற்கு நடுக்கமாக இருந்தது.
நான் போனதும் என்னைப் பார்த்து அழகாக சிரித்தார்.எனக்கோ முதுகுப் பக்கமாக வியர்த்து தண்ணீராக ஒடியது. அவர் என்னைப் பார்த்து சாப்பிட்டிங்களா என்று கேட்டார். அப்போது நேரம் மாலை 5.15க்கு மேல் இருக்கும். நான் சாப்பாடா என்ன சாப்பாடு என்று கேட்டதும் சிரித்தார். பின் சும்மா கேட்டேன் என்று கூறிவிட்டு என்னை உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டார். நானும் தலையை மட்டும் அசைத்து விட்டு நிற்கும் போதா அந்தப் பேரூந்தும் வர வேண்டும். அவ்வளவுதான் பேச்சு பின் வழமையை விட இன்னும் அதிகமாக என்னைப் பார்ப்பார்.
இவரது பார்வை என்னை மட்டுமல்ல எனது சகோதரிகளையும் ஆச்சரியப் படுத்தியது. எனது சகோதரிகளுக்குச் சந்தேகம் வந்து விட்டது. பெண்களுக்குள் எவ்வளவு போட்டி பொறாமை இருக்கும் என்று அப்போதுதான் புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணிடம் பேசுவதைக் குறைத்து விட்டனர் எனது சகோதரிகள். நாளடைவில் அவருடன் காரணமில்லாமல் சண்டைபிடித்து பேசாமல் விட்டனர். என்னைப் பார்த்து அவள் உன்னையே பார்க்கிறாள். நீ பார்க்காதே பேசாதே அப்படிப் பார்த்துப் பேசினால் அம்மாவிடம் சொல்லிவிடுவோம் என்று எச்சரித்தனர்.
நானும் எல்லாவற்றையும் மறந்து எனது வேலையைச் செய்து கொண்டிருக்கயில் ஒரு நாள் அதே பேரூந்து நிலையத்தில் சந்தித்தோம். அப்போது அவர் கண்களிலிருந்து கண்ணீராக ஓடியது எனக்கும் மிகவும் கஸ்ரமாக இருந்தது, பின் அவர்கள் யாழ்ப்பாணம் அவர்களது சொந்தக்காரரின் வீட்டில் இருப்பதற்காக அங்கு போகவுள்ளதாகச் சொன்னார். நானும் மனவருத்ததுடன் விடை பெற்று வந்து விட்டேன்.
பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் இடம் மாறிச் சென்று விட்டார்கள். எனது சகோதரிகளுக்கோ அளவில்லாத சந்தோசம். அத்துடன் முடிந்தது எனது முதல் காதல்.* சிலநாட்கள் மிகுந்த வருத்தத்துடன் இருந்தேன். பின் போகப் போகச் சரியாகி விட்டது.
இப்படியாக 1986 முடிந்து 1987ம் பிறந்து விட்டது. நான் அதே வேலை செய்து கொண்டிருந்தேன் பின் என்னுடன் பரந்தனிலிருந்து வந்த ஒருவரும் சேர்ந்து கொண்டார். நாம் இருவரும் ஒன்றாக வேலைக்குப் போய் வருவோம். இந்த நேரத்தில்தான் பருத்தித்துறை இராணுவமுகாமிலிருந்து படையினர் நெல்லியடி நோக்கி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர் (ஒபரேஷன் லிபரேஷன்) அந்த நேரம் எமது பகுதியெங்கும் ஒரே குண்டுச்சத்தங்கள் கேட்டவண்ணமே இருந்தது. வடமராட்சிப் பகுதியிலிருந்து பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வந்து நாம் இருந்த பளை மற்றும் இத்தாவில் பகுதியில் தங்கியிருந்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது இலங்கை விமானப் படையினரிடம் சியாமா செட்டி என்னும் தாக்குதல் விமானமும் அவ்ரோ என்னும் விமானமும் தாக்குதலில் ஈடுபட்டனர். நானும் வேலைக்குப் போய்விட்டேன் இரண்டு விமானங்கள் நான் வேலை செய்துகொண்டிருந்த இடத்திற்கு மிகவு அருகில் குண்டுகளை வீசியது அதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்த நேரம் பதுங்கு குளிகள் ஏதும் இல்லை. நான் ஓடிச் சென்று பனை மரங்களுக்கு அடியில் விழுந்து படுத்துக் கொண்டேன். எனது பக்கமாக வந்த அவ்ரோ விமானம் பரல் குண்டு ஒன்றைப் போட்டது. பரல் குண்டு என்றால் இலங்கை இராணுவம் தயாரித்த குண்டு. பெற்றோல் பரலை இரண்டாக அறுத்து அதனுள் கொஞ்ச வெடிமருந்தும் மிகுதியெல்லாம் தார் மற்றும் எரிபொருளால் தயாரிக்கப்பட்டது. அது வெடித்தால் 300 மீற்றர் சுற்றளவிற்கு தீ பிடித்து பற்றி எரியும்.
நானும் இன்னும் சிலரும் பனைகளுக்குள் படுத்துவிட்டோம். அவன் போட்ட குண்டு நாங்கள் படுத்த பனைமரங்களுக்குள் விழுந்து வெடித்தது. எங்கும் தீ பற்றி எரிந்து கொண்டே இருந்தது. எம்மால் மூச்சுவிடக் கஸ்ரமாக இருந்தது. எங்கும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. நான் எழும்பி ஓடினேன். எனது ஆடைகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அங்கிருந்து வேகமாக ஓடி ஒரு கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன். தீ அணைந்து விட்டது. எனக்கு ஒரு காலில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது. பின்னர் அங்கு நின்ற சிலர் என்னைக் கிணற்றிலிருந்து தூக்கிவிட்டனர்.
பின் வீடு சென்று பார்த்தால் வீட்டிற்கு அருகிலும் குண்டு போட்டுள்ளான் சிங்களவன். வீட்டில் அனைவரும் பயத்தின் உச்சத்திற்கே போய்விட்டனர். ஏன் என்றால் விமானக் குண்டு வீச்சு இதுதான் எங்கள் அனைவருக்கும் முதலாவது அனுபவம்.
நன்றி.
தொடரும்…
வே.சுபாஸ் தமிழீழம்
07.11.2020
பாகம் 01 பார்வையிட
பாகம் 02 பார்வையிட
பாகம் 03 பார்வையிட
பாகம் 04 பார்வையிட
பாகம் 05 பார்வையிட
பாகம் 06 பார்வையிட
பாகம் 07 பார்வையிட
பாகம் 08 பார்வையிட