ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான்
எனது அனுபவம் 1983 (பகுதி 03)
(குறிப்பு .. எனது சொந்த மாவட்டம் திருகோணமலை ஊர்கள் பாதுகாப்பு கருதி பதியவில்லை மன்னிக்கவும்)
எனக்கு இரண்டு பெண் சகோதரிகளும் இரண்டு ஆண் சகோதரர்களும் உள்ளனர். நாங்கள் 5 சகோதரர்கள். எனது சகோதரிகள் மிகவும் அழகாக இருப்பார்கள். அக்கா வயதிற்கு வந்து விட்டதால் அம்மா அப்பாவிற்கு கவலை என்றால் சொல்லமுடியாது. அழகாக இருக்க வேண்டிய எனது சகோதரிகள் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் போல் தலைவிரி கோலமாக சிங்களவனுக்குப் பயந்து இருப்பார்கள்.
அன்றும் வழமைபோல் இரவாகியதும் சாப்பிட்டு விட்டு படுக்கைக்காக காடுகளிற்குப் புறப்பட்டோம். வயதுக்கு வந்த அக்காவை 1 நாளிலேயே காட்டிற்குள் கூட்டிப்போவதை நினைத்து அம்மா மிகவும் வேதனைப்பட்டார்.
அன்றும் எல்லாக் குடும்பமும் ஒன்றுசேர்ந்து ஓர் இடத்தில் உறங்கினோம். நாம் உறங்கும் இடத்திற்கு அருகாமையில் காட்டில் சிறு பாதை உள்ளது. இரவு 10 மணியளவில் அந்தப்பாதையூடாக சிலர் வருவதை அவதானித்த பெரியவர்கள் யார் என்று பார்க்கமுன் அவர்கள் எங்களைச் சுற்றி வளைத்து விட்டனர். பெண்கள் குழந்தைகள் கத்தத் தொடங்கியதும் வந்தவர்கள் சத்தம் போட வேண்டாம் நாங்களும் தமிழர்கள்தான் என்று எங்களுக்கு ஆறுதல் சொல்லி எங்களை அமைதியாக்கினர். பின்னர் அவர்கள் நாங்கள் உங்களுக்காகப் போராடும் இயக்கம் என்றும் எங்களுக்குப் பசிக்கிறது சாப்பாடு தரமுடியுமா என்று கேட்டனர். இரவில் அவர்களைச் சரியாக இனம்காண முடியவில்லை. அதனால் வந்தவர்களில் ஒருவர் பக்கத்து ஊரிலுள்ளவர் என்றும் அவர் எங்களுக்கு வழிகாட்டி என்றும் கூறி அவரை அறிமுகப்படுத்தியதால் நாங்கள் நம்பினோம். பின்னர் வீடுகளுக்குச் சென்று சமைக்கத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டுவந்து சமைத்து அவர்களுக்கு கொடுத்து அவர்களை வழியனுப்பி விட்டோம்.
எனக்கு ஒரு கவலை வந்தவர்களிடம் இருந்த துப்பாக்கிகளைப் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று. வந்தவர்கள் 15 பேர் அவர்களிடம் இரண்டு ஆயுதங்கள் மட்டுமே இருந்தது. ஒன்று வேட்டைத் துப்பாக்கி மற்றது ..எஸ். எம். ஜி. (சப் மெசின் கன்) என்னடா இவன் சிறுவயதாக இருக்கிறான் இவனுக்கு எப்படித் தெரியும் என்று. 6 வருடங்கள் கழித்து நானும் அதைக் கையாண்டதால் தெரியும். அதைப்பற்றி பின்னர் (1989 ல் ) எழுதுகிறேன்.
மறு நாள் காலை விடிந்ததும் வழமைபோல் வீடுகளுக்குச் சென்றோம். காலை 8 மணியளவில் கடற்படையினர் எமது கிராமத்தைச் சுற்றி வளைத்து இளம் வயதினர்கள் அனைவரையும் தனியாகப் பிரித்து எமது கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருத்தி வைத்தனர். இம்முறை எனது அப்பாவை விட்டு என்னைக் கைது செய்து விட்டனர். எனக்கு அப்போது அரும்பு மீசை வளரத் தொடங்கியிருந்தது. பார்வைக்கு 18 வயது இளைஞன் போல இருந்ததால் என்னையும் கைது செய்து விட்டனர்.
200க்கும் மேற்பட்ட கடற்படையினர் எம்மைச் சுற்றி காவல் காத்திருந்தனர். பின்னர் மாலை 3 மணியளவில் ஒரு ஜீப்பில் கொமான்டர் வந்தான் அவனுடன் உடல் முழுவதும் மறைத்தாற் போல் ஒரு உருவமும் வந்திறங்கியது. அப்போது ஒரு முஸ்லிம் கடற்படைச் சிப்பாய் எங்களிடம் தமிழில் பேசினான் இரவு (கொட்டியா என்றால் தமிழில் புலி) கொட்டியா வந்தது நீங்கள் சமைத்துக் கொடுத்துள்ளீர்கள் என்று கூறினான். எங்களுக்கு உயிரை விட வேண்டும் போல் இருந்தது. இரவு நடந்த விசயம் எப்படி இவர்களுக்குத் தெரியும் என்று.
அதன் பின் எங்கள் எல்லோரையும் சரமாரியாகத் தாக்கினார்கள். எனக்கு அப்படி அடிவாங்கும் வயதா அது. சிலருக்கு மண்டை உடைந்து மயங்கி விழுந்தனர். எல்லோரும் வாய் விட்டு பெரிய சத்தமாகக் கத்தினோம் அது அவர்களின் காதுகளுக்கு கேட்குமா. இனவெறி பிடித்தவர்கள் அல்லவா. எனது முதுகிலும் நெஞ்சிலும் கோடரியால் தாக்கினான் ஒரு சிப்பாய் எனக்கு வாயால் இரத்தம் வரத்தொடங்கியது. நானும் மயக்க நிலைக்குப் போய் விட்டேன். …
தொடரும்…
நன்றி.
வே. சுபாஸ் தமிழீழம்.