வீரத்தால் ஒன்றாகு விடுதலையே மூச்சாகும்…!
வந்தாடும் பகைவனிடம்
வென்றாடப் படை நடத்தி
விழிமுடிப் போனவரின்
ஈகம் நினைக்கிறோம்
சென்றாடும் களமுனையில்
வென்றாட வேண்டும் என்று
பகையோடச் செய்தவரின்
பாசம் புரிகின்றோம்
மழையோடும் ஆறு எங்கும்
மரமாடும் காடு எங்கும்
கந்தகத்தை காவி எங்கள்
கடமை முடிக்கிறோம்
செந்தமிழை வாழவிடும்
எம்தமிழை ஆள விடும்
சிங்களமே மீறி விடில்
மோதி வெடிக்கிறோம்
நமக்கென்று ஒரு நாடு
நம் சொந்தம் நம் வீடு
நம்பிக்கை தளர்வின்றி
நடையே பயில்கின்றோம்
ஈருடல் ஒருயிராம்
காதலின் உயிர் வேராம்
ஈழத்தின் இருப்பிழந்தே
இன்னும் துயில்கிறோம்
காயங்கள் ஆறவில்லை
சோகங்கள் தீரவில்லை
சொந்தமண் உணர்வு மட்டும்
சொர்க்கமாய் தெரியுதங்கே
வலி தந்தோன் வாழ்ந்ததில்லை
வல்லமைகள் தாழ்ந்ததில்லை
கோபுரங்கள் சாய்வதெல்லாம்
குடிசைகளின் குமுறலில் தான்
தேசமதை நெஞ்சில் நினை
வீரமதை பிஞ்சில் விதை
சூரியனின் கதிர் ஒன்றே
சுடும் நிலவு குளிர்விக்கும்
வீரத்தால் வெகுண்டு எழு
விடுதலையால் வென்றாவோம்
தீரத்தால் களம் கண்டு
ஈழத்தில் ஒன்றாவோம்…
***கவிப்புயல் சரண்******