வலியவள் என் மொழியவள்….!
அன்னையவள் தமிழ் அணங்கை
அரியணைக்கு ஏற்றுவோம்
அந்த நொடி சா வரினும்
சிரித்து உயிர் போக்குவோம்
வெந்தணலின் வேர் எடுத்து
வீரம் நிலை நாட்டுவோம்
செந்தணலைச் சீர்உருவாய்
சிறப்புடனே வாழ்த்துவோம்
எந்த நொடி வந்திடினும்
வான் புகழை தாங்குவோம்
வந்த நிலை மறவாது
எம் தமிழை போற்றுவோம்
சிந்தை ஒன்று எம்மில் உண்டு
நிந்தையினைத் தாக்குவோம்
மந்தை என்று சொன்னதந்த
மடமை தனை நீக்குவோம்
மொழியவளின் துயர் நீக்கி
மோகனங்கள் கூட்டுவோம்
விழிநிகராய் தினம் போற்றி
விண்ணதிரப் போற்றுவோம்
இரு கரங்கள் கூப்பி அந்த
அன்னை மொழி போற்றுவோம்
திருவுருவில் நினைவேந்தி
தமிழணங்கை வாழ்த்துவோம்….
…கவிப்புயல் சரண்…