யுத்தம் அழித்தது ஒருபாதி மிச்சம் அழித்தது கடற்தாயி….!
ஆருயிர் சொந்தங்களை
ஆழிப்பேரலை காவுகொண்டு
ஆண்டுகள் ஈரேழு ஆனதின்று..
அள்ளித் தின்றவள் அடங்கி விட்டாள்
ஆற்றும் வழி எமக்கு யாரு தந்தார் ??”
காற்று வேண்டிக் கடற்கரை சென்றோரை
காவுகொண்டது கடலன்னை
கரை மீறித் தன் இராட்சத அலைவீசி தனக்கிரையாக்கியது எம்மண்ணை.
நேற்றுவரை அழகாய் அணைத்தவளே இன்று
கூற்றாய் வந்தெங்கள் குலமழித்ததேனம்மா
மீன் பாடும் தேன் நாட்டை
பிணக்காடாக்கிசென்றதேனம்மா
காலம் வருமுன்னே காலனாய் வந்ததேனம்மா
போர்க்கோலம் ஆறி எம்மண் அமைதிகொள்ள முன்
உன் அலங்கோலமேனம்மா
வேர்கொண்டு நாமெழ போரும் விடவில்லை இன்று நீயும் விடவில்லை
நேற்று வரை கரை வந்துன்னலையாலே
முத்தமிட்டு முத்தமிட்டுச் சென்றவளே
இன்று உனக்கென்னாச்சு
ஓங்கி அறையும் அளவுக்கு உனக்கு ஏனிந்த கொடும்மூச்சு.
வங்கக் கடலெங்கள் தங்கக்கடெலென்றோமே
பொங்கும் தமிழ்வீரம் சொல்லும் அலையென்றோமே
அழகாய் வந்துந்தன் அலைமீது கால் நனைத்து ஆனந்தம் கண்டோமே
நிலவெறித்த பொழுதுகளில் உன் நீல வர்ண அழகை உலகறியப் பாடினோமே
ஏனம்மா இந்தக் கோபம்
எமக்கு யாரிட்டது இந்தச் சாபம்
ஏதுமறியாச் சிசுவைக்கூட முழுதாய் விழுங்குமளவிற்க்கு உனக்கென்ன பசி
மனித உடல் புசித்துன் பசிதீர்க்க அதில் என்ன அத்தனை ருசி
கணப்பொழுதில் வந்தெங்கள் முற்றம் முழுதும் பிணக்குவியள் சேர்த்தாய்-இன்று
நினைக்கையிலும் எம் நெஞ்சு பதறுகிறது
குஞ்சு குருமனையெல்லாம் பஞ்சப் பிறவியாய் வந்தள்ளிச்சென்றாயே
பாவம் அவர்கள் ஏதுமறியாப் பாலகர்கள்
தூக்கம் கலையமுதலே தூக்கிச்சென்றதைக் கூட அவருணரார்.
வாரித்தந்தவள் வாரிக்கொள்வாளென யாரும் அறிந்திலர் ..
வாரித்தந்தவள் வாரிக்கொல்வாளென யாரும் அறிந்திலர் ..
ஊருக்குள் புகுந்தவள்
ஊழித்தாண்டவம் ஆடிஅழித்ததை யாரும் மறந்திலர் .
யுத்தம் அழித்தது ஒருபாதி
மிச்சம் அழித்தது கடற்தாயி
நித்தம் நினைந்து நாம் உயிர்வாடி
கத்திட எம்முறவுகள் மீண்டும் வருமோடி?