மீண்டும் வான் பார்க்கும் புலிக்கொடி
வசந்தமது வந்தாலே
வண்டினமும் ஆர்க்கும்
நிலம் வெடித்த வயல்கள்
எல்லாம் நீரை பார்க்கும்
வீசும் கடல் காற்றினிலே
உப்பும் பூக்கும்
விதி சொன்ன புலிக்கொடியோ
வானம் பார்க்கும்
பனை மரங்கள் புலி வரவை
தூர நோக்கும்
பகை மனங்கள் பயத்தினிலே
இரவில் வேர்க்கும்
சிறை உடைந்து தமிழ் வாழ்வு
சிகரம் பார்க்கும்
பறை முழக்கி பகை நிலையை
பாடை ஏற்றும்
விடை கொடுத்த தாய் மனங்கள்
மகவுநினை விம்மி நிற்கும்
தடை உடைத்து தமிழ் நிலங்கள்
பகைமை தனை தும்மிப் பார்க்கும்
விதைகுழிக்குள் பெரும் குரலோ
விண்ணை முட்டும்
புதை குழிக்குள் புயல் எழுந்து
கதவைத் தட்டும்
காலமது மீண்டு வந்து கையில் ஆகும்
வேழமது ஆண்ட நிலம் சோர்ந்தா போகும்
ஞாலமது எதிர்த்தாலும் சோரம் போகா
வீரமது ஈழ மண்ணில் காவல் நிற்கும்.
…..கவிப்புயல் சரண்….