மீண்டும் ஒரு போர்க்களம் என் கண்ணினுள்ளே விரிகிறது..
குண்டுகள் வெடிக்கவில்லை, சன்னங்கள் சீறவில்லை. ஆனாலும்
மனிதர்கள் வீழ்கிறார்கள்…..!
கொரோனா என்ற எதிரி கொடும் போர் தொடுத்துள்ளான்.
மனிதர்கள் இப்போதும் வீழ்கிறார்கள்.
பதுங்குகுழியில் பதுங்கவில்லை, மரத்தடியில் ஒதுங்கவில்லை, வாய்க்காலில் வீழவில்லை,ஆனாலும்,.. இப்போது பதுங்கியிருக்கின்றோம் பூட்டிய வீடுகளுள்.
எல்லாவற்றையும் பார்க்கும்போது மீண்டும் வருகுது
“கஞ்சிப்பானை ” நினைவுகள்.
வானிருந்து வந்த குண்டு,
வன்னி மண்ண பிளந்த போது,
காணி ,பூமி கைவிட்டு நாங்கள்
இடம்பெயர்ந்து போகேக்குள்ள,
பானை, சட்டி, அகப்பை போக
பசியைப் போக்க எடுத்தது
ஆனையிறவு உப்புக்கல்லும் சிவத்தப்பச்சை அரிசியுந்தான்..
கொஞ்சமாக
கொண்டு போன நல்லதீனி முடிஞ்சு போக,
பஞ்சம் மட்டும் நிறைஞ்சிருக்க
பட்டினி எம் உடல் உருக்க ,
மிஞ்சிக் கடல் கரையில்,
-செத்த
மீனைப் பொறுக்கித் திண்டாலும் ;
அஞ்சு மாசம் எங்களுக்கு -அரிசிக்
கஞ்சி தானே சாப்பாடு..
ஆட்டிலறி தென்னையில பட்டு ,சிதறிப்போன தேங்காய் பொறுக்கி, ஆராவது கொண்டு வந்தா,?
ஆராவது உயிரோட இருந்து கொண்டு வந்தா!
பங்கருக்க பதுங்கியிருந்து
பால்க்கஞ்சி சாப்பிடலாம்..
பால்க்கஞ்சி எண்டதெல்லாம் பல்லாயிரம் செல்லோட பறந்துபோக,
தண்ணிக்குள்ள உப்பைப்போட்டு, அரிசியையும் கொஞ்சம் சேர்த்து,
பொங்கல் மாதிரி நினைச்சு சாப்பிட்டம் -அதுவும்
போதாது சிலருக்கு!
கை, கால் இல்லாதவனும்,
கண் குருடாய்ப் போனவனும்,
கைக்குழந்தை, சிறுசுகள் தொடங்கி
காயப்பட்ட ஆக்களெல்லாம்
கைக்குத்தரிசிச் சோறும் கறியும்
வேணும் எண்டு கேக்கேல!
கையளவு அரிசிக்கஞ்சி
காணும் எண்டு தானே சொன்னோம்..
ஆனைப் பசிக்கு சோளன் மாதிரி
அரைக்கிலோ அரிசி மூண்டு நாளுக்கு..
கானல் நீராய் கனவில மட்டும்
கறியும் சோறும் திண்டு குடிப்போம்..
சாப்பாடில்ல.. தண்ணியில்ல..
சாகிற ஆக்கள் குறையவில்ல..
காப்பாரில்லை.. பதறித்துடித்தோம்..
கேட்பாரின்றி செத்து மடிந்தோம்.
உயிர் வாழும் உரிமையை மட்டுமே கேட்டு
உயிருக்குப் போராடிய தமிழர்களை,
தடைசெய்த வெடிகள் கொண்டு தடையேதுமின்றிக் கொன்றொழித்த வல்லாதிக்கக் கொடூரர்களை விடக் கொரோனா ஒன்றும் கொடியதில்லை..
சாவுப் பயங்கள் எல்லாம்
எங்களுக்கு புதுசு இல்ல
-நாங்கள்
காவு குடுத்த உயிருகளும்
கொஞ்ச நஞ்சமில்ல..
கடுமைப் பசியையும் கண்ணீரோட
கடந்த தமிழர் தானே நாங்கள்..
முருங்கையிலைக் கஞ்சியோட
முள்ளிவாய்க்கால் கடந்த நாங்கள்
சுருங்க மாட்டோம் பட்டினியால் -இது
சுவடு மறைந்த பழைய பசி..
வகைவகையான உணவுகளை வாங்கிப் பதுக்க -இப்ப நாங்கள்
வசதியாய் இருக்கவில்லை.
வடுக்களோடும் வலிகளோடும் வறுமையோடும் இருக்கிறோம்.
கொள்ளை நோயும் கொடும்பசியும் -இவ்
உலகத்தையே மூடுமெண்டால்!
மீண்டும் உப்புக்கஞ்சியுடன்,
கொரோனாவைச் சந்திக்க நாங்களும் தயார்..
– வன்னி முத்தம்மா