போர் நெறி நிற்கப் பணித்த தேசம்….!
கள்ளத் தோணியர் நாம்
சொல்லித் திரிந்த பகை
கொல்லத் துடித்ததெம் மண் -அது
வீழாப் புகழ் கொண்ட மண்
வெல்லத் திறம் கொண்டு
வேங்கை வழி சென்று
அள்ளிப் பகை தின்ற மண் -இது
அடங்காப் புகழ் கொண்ட மண்
தாயும் தந்தையரும்
தமிழின் பிறகு என்று
தானை நடத்திய மண் -இது
சேனைத் தமிழவன் மண்
வேகம் கொண்டு நிற்க
வேங்கை வழியதுவே சாலச்
சிறந்ததென்று ஆழப் பிறந்ததெம் மண் -இது
வாழத் துடித்தவர் மண்.
பகை காலில் பணியோம் என்ற
பாசறை வீரம் கண்டு
சாகத் துணிந்ததெம் மண் -உலகில்
ஆகச் சிறந்ததெம் மண்
கொள்கை எனும் நெருப்பில்
கோலப் புடங்கள் இட்டு
உயிர் அள்ளித்தெறித்ததெம் மண் -கடல்
உப்புக் கரித்ததெம் மண்
வல்ல தலை இருந்தும்
நல்ல படை நடந்தும்
துரோகத் தீயில் விழுந்ததெம் மண் -பகை
இன்றும் பயந்திடும் மண்
அந்தப் பொழுது கண்ணில்
வீழ்ந்த உடல் நினைந்து
வெல்லத் துடிக்கிறது- மண்
உடல் வெம்பி வெடிக்கிறது
வந்த பகை எல்லாம்
வாசல் திரும்பவே
வாகைகள் சூடிய மண் –
இது வணங்கா முடி கொண்ட மண்
வெந்து வீழ்வதை
வெறுத்து நிமிர்ந்துமே
வெங்களம் ஆடிய மண் _இது
வெற்றியை நாட்டிய மண்
தந்த வலி எல்லாம்
தவிடுகள் ஆகவே
தானை நடத்திய மண் –
தாயில் சிறந்ததெம் மண்
சொந்த மண்ணிலே
சுதந்திரம் காணவே
சேனை திரட்டிய மண் –
சொல்லிப் பகை தின்ற மண்
நல்ல தலை எம்மில்
நாற்படை கட்டியே
நாட்டினை ஆண்டதெம் மண்_
எம் நாவில் உறைந்ததெம் மண்
புல்லர் உயிர்களை
பூமியில் மூட்டியே
பூஜைகள் செய்ததெம் மண்-
இது பூகம்ப துகள் கொண்ட மண்
சூழும் துரோகத்து
நீளும் கரங்களால்
நிம்மதி இழந்ததெம் மண்- எம்
நிமிர்வில் நிலைபெறும் மண்
ஆளும் நினைவுடன்
மீளும் வெறி கொண்டு
மீண்டு எழுந்திடும் மண் -எம்
வேங்கை வீரத்தின் மண் .
….கவிப்புயல் சரண்…