நாங்கள் நகரத் தொடங்கினோம் அதனால் எங்கள் கால்கள் பிடுங்கப் பட்டது …..!
மெல்லவாய் எங்கள் நினைவுகளை சுமந்து நாங்கள் எழுந்து கொண்டு இருந்தோம்
அப்போது எங்களை எவரும் எதுவும் செய்யவில்லை
ஆனால்
இன்று நகரத் தொடங்கினோம்
அதனால் எங்கள் கால்கள் பிடுங்கப் பட்டது
உயிர்த்த ஞாயிறு எங்களை மரிக்கச் செய்தது
இருப்பிடத்தையும் எல்லைகளையும் பறிக்கவும் செய்தது
சுடு மணலில் நாம் வரிசை கட்டி நிற்கவும்
சுடுகலனை அவர்கள் தொட்டு நிற்கவும்
எங்கள் உறுப்பில் இருந்து உடமைகள் வரை தடவி செல்கிறது அவர்கள் கரங்கள்
இது 2010 க்கு பின்னர் பிறந்தவர்க்கு கூச்சமாய் இருக்கலாம் ஆனால் எமக்கு குற்ற உணர்வாய் அல்லவா உள்ளது
வசந்தம் கொடுக்க வேண்டிய எங்கள் வருங்கால சந்ததிக்கும் எங்கள் வலிகளை அல்லவா கடத்தி விட்டுள்ளோம்
பெண்களின் உள்ளாடைகளில் இருந்து அத்தனையும் பகுத்து ஆராயும் படையினர் ஒன்றும் பக்குவம் பெற்றவர்கள் அல்ல
வன்மம் நிறைந்தவர்கள் வக்கிரம் கொண்டவர்கள்
கொள்கை அற்றவர்கள் வைத்த குண்டில் எங்கள் கோவணமும் தான் பறந்தது
அம்மணத்தை கையால் பொத்தி கொள்ளுங்கள்
இனி என்ன செய்ய போகிறோம்
எங்கள் வீரர்களின் விதை குழிக்கு முன்னால் இனி மீண்டும் சப்பாத்து கால்கள்
அவர்களின் காவலரண் எனும் பெயரில் ஒரு காம பீடம் அங்கே கரு கொள்ளும்
முட்டி நிற்கும் விடுதலை மூச்சு அடங்கி போகும் வரை அவர்கள் அங்கே தான் இருப்பார்கள்
மீண்டும் எருக்கிலைகள் முளைக்கும்
எஞ்சியவை தோண்டப்படும்
எடுத்து வைத்த கல் குவியல்
காணாமல் போகும்
இனி எங்கே சென்று அழுவோம்
எவர் முன்னால் விழி நீர் இறைப்போம்
பூக்களை எங்கே போடுவோம்
புன்னகை எங்கே புதைப்போம்
இதனை எழுதவே வடிந்த நீரை
எங்கே துடைப்போம்
இறுதிக் கவி என இதனையே படைப்போம்
இந்த நிலை உருவானால் எமக்கு உணர்வு இருந்து என்ன பயன்
உயிரோடு எம்மையும் எரியுங்கள்
செய்யுங்கள் எங்களுக்கும்
இறுதி அஞ்சலியை….
அவரை விதைத்த குழியில்
எங்களையும் விதையுங்கள்
அவர்களுடன் ஒன்றாய் புதைவோம்
அல்லது அவர்களுடன் முளைப்போம். ..
கவிப்புயல் சரண்