“நாங்கள் எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டோம்”
எங்கள் பாதைகள் நெடுகப்
பள்ளங்கள் மேடுகளையும் தாண்டி…
வலிகளையும் ரணங்களையும் கடந்தபடி…
குருதியாற்றில் நீந்தி நிமிர்ந்தபடி…
நாங்கள் தொடர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டோம்…
எங்களுக்கான பாதைகளை
நாமே அமைத்தபடி…
எங்களுக்கான வாசல்களை
நாமே திறந்தபடி…
எங்களுக்கான வாழ்வை
நாமே வடிவமைத்தபடி…
நாங்கள் எழுந்து நடக்கத்
தொடங்கிவிட்டோம்…
வலியைத் தந்தவரை விடவும்
வல்லமை மிக்கவராய்…
வாழ்வைப் பறித்தவரை விடவும்
வரம்பெற்றவராய்…
வலுவிழந்து வீழ்த்தப்பட்டவர்
வரலாறைச் சுமந்தவராய்
நாங்கள் நிமிர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டோம்…
எங்கள் குரல்களில்
வலிமை சேர்த்தபடி
எங்கள் உரிமைக்காய்
ஓங்கி ஒலித்தபடி…
எங்கள் வேற்றுமைகளைக்
காலால் உதைத்தபடி,
எங்களுக்காய் ஒரு விதி செய்ய…
கைகள் கோர்த்து
நடக்கத் தொடங்கிவிட்டோம்…
விண்ணைத்தொட்டும்
மண்ணைத்தொட்டும்
வித்தைகள் பல பயின்று
விடுதலை நெஞ்சில் சுமந்தபடி…
சந்ததி கடந்தும் சொந்தமண்
மறவா சோதரர் ஒன்றாய்த் தமிழராய்…
நாங்கள் சேர்ந்து நடக்கத்
தொடங்கிவிட்டோம்…
காலம் வழிநடத்தக் கடல்கடந்து
ஞாலம் முழுதும் பரந்தபடி…
ஓலம் தந்த வாழ்வில் ஒளியேற்றிப் புதுக்
கோலம் கொண்டு நிமிர்ந்தபடி…
காலம் வெல்லக் காத்திருக்கும்
ஈழத்தமிழராய் இன்று
நாங்கள் விரைந்து நடக்கத் தொடங்கிவிட்டோம்…
-காந்தள்-