கலைந்துபோகும் கனாக்காலம்…..!
கலைந்துபோன வாழ்வின்
கனாக்காலங்களுடன்
கண்ணீரைச் சொரிந்தபடி
காவியம் ஒன்று மீண்டும் அரங்கேறுகின்றது…
விழுதுகளைத்தேடியபடி இன்னமும்
விருட்சத்தின் வேர்கள்…
விடையெதுவும் தெரியாத
வினாக்குறியாய் வாழ்க்கை
கூன் விழுந்து கிடக்கிறது …???
எப்போ வருவார்? எப்படி இருப்பார்?
எவர்க்கும் தெரியா
ஏகாந்த நிலையில்
எடுப்பார் கைப்பிள்ளையாய்
விடுக்கும் வாக்குறுதிகளால்,
இட்டு நிரப்பப்பட்டபடி
எடுத்த எடுப்பில் நகர்கிறது வாழ்க்கை….
பழுதாய்ப்போன உருவங்கள்-அழுது
பழுப்பேறிப்போன கண்கள்,
பகல் கனவாய்ப்போன பருவங்கள்
பார்த்துக் கொள்ள எவருமில்லா
பரிதாப வாழ்வுநிலைகள்…
பாலூட்டி வளர்த்த பிள்ளை
பந்தம் வளர்த்த துணை
பாசம் காட்டிய தாய் தந்தை- நேசம்
பகிர்ந்து கொண்ட சோதரம்,நட்பு
என ஆணும் பெண்ணுமாய் நீங்கள்
போன இடம் எங்கே???
புதைக்கப்பட்டீரோ, எரிக்கப்பட்டீரோ
சிறைகளில் சிதைக்கப்பட்டீரோ என்ற
சிந்தனைகள் எழாமலில்லை…
இருந்தும் “கையளிக்கப்பட்டோர்” “காணாமலாக்கப்பட்டோரென்ற”
உச்சரிப்பின் இரண்டுக்குமிடைப்பட்ட
நூலிடைவெளியில்….
உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறோம் நாம்…..
விடிபொழுது எமக்கிலையோ…?
வீணர் செயற்கு முடிவிலையோ?
-காந்தள்-