தூரம் அதிகம் இல்லை…!
வண்ணத்தமிழ் மானமென்றும் மறையாது
விண்ணதிர நின்ற வீரம் குறையாது
வீணடித்து விரயம்பண்ண முடியாது
விடுதலையே விலையுனக்குக் கிடையாது!
கூன்விழுந்து குடிசிதறிப் போகாது
கும்பிட்டு மண்டியிட்டுச் சாகாது
பேதலித்து நின்ற வாழ்வு பெரும்பாடு
பெருமையிழந்து போமாமோ வெறுங்கூடு!
ஆர்ப்பரித்து நின்ற அலை அடங்காது
ஆணவத்தை வெல்லும்வரை முடங்காது
போர்ப்பறையின் வெற்றியொலி மறங்கூறு
புலிக்கொடியின் பெருமையதைத் தினங்கூறு!
கூனுமில்லை குனிவுமில்லை பறந்தோடு
கூக்குரலில் சாக்காடு நிரம்பாது
இழப்பதற்கு எதுவுமில்லை எழுந்தாடு
ஈகம்செய்த புண்ணியரைச் சுமந்தோடு!
தூக்குகின்ற ஆயுதமாய் அறிவேந்து
துன்பமதை வதம்செய்யும் வரமேந்து
காக்கும் எம் காவலனாய்ப் பெருவேந்து
கரிகாலப் பெருந்தகையை மனமேந்து!
-காந்தள்-