குடியேற்றத்தின் முதல் உணர்வு …!
அன்று வானெங்கிலும்
பளிச்சென்ற ஒளி
என் தேசத்தை சூழ்ந்திருந்தது
சன்னச் சிதறல்களின்
வீரியமான பாய்ச்சல்களில்
என் உடல் சிதைக்கப்படயிருந்தது
என் செவிகள் பல கதறும் சத்தங்களை
இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது
ஏன் இவர்கள் கத்துகிறார்கள் ?
யாராவது இவர்களை
துன்புறுத்துகிறார்களா ?
இல்லை இவர்கள் கதறும்
மொழியின் அர்த்தம்தான் என்ன ?
அன்று அடைப்பு மலசலங்கூடங்கள்
பெரிதாக இருக்கவில்லை
கடற்கரை மணல்களில்
அதிகாலையில் சங்கக்கடை
வரிசையைப் போன்றே
அன்றைய எமக்கான
மலசலக் கூடங்கள் அமைந்திருந்தன
பசியென்ற ஒன்று
பெருங்காயத்தின் வலியைப்போன்று அரித்துக்கொண்டிருந்தது
முச்சக்கர வண்டியைக்
கொடுத்து தேங்காய் வாங்கிய நிகழ்வும்
அங்கேதான் நிகழ்த்தப்பட்டது
ஆங்காங்கே சில பெரும் கடைகள்
உடைத்து விடப்பட்டிருந்தன
சீனி அரிசி மா மூட்டைகளையே
சுமந்து கொண்டிருந்தார்கள்
தொலைக்காட்சி பெட்டியையோ
குளிர்சாதனப் பெட்டியையோ
திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்
தென்னை ஓலைகளிலும்
தரப்பாள்களிலும் தான்
எமக்கான அன்றைய
வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன
சுத்தப்படுத்திய குடிநீர்
வசதித்திட்டங்கள் ஏதும் இருக்கவில்லை
வெடிச் சத்தங்கள் மெல்ல மெல்ல
நெருங்கி வருவதை
கூர்மையாய் நாங்கள்
உணர்ந்துகொண்டிருக்கிறோம்
நாங்கள் புறப்பட
ஆயத்தம் செய்கின்றோம்
நிஜங்களை விட்டவர்களாய்
நினைவுகளை சுமந்தவர்களாய்
வன்னியூர் கிறுக்கன்