இப்படி_வாழப்_பழகிக்கொள்ளுங்கள்
எங்கே எமக்கான விடுதலை
திருடியது யார் ?
எங்கே எமக்கான உறவுகள்
சிதைத்தது யார் ?
எங்கே எமக்கான உரிமை
பறித்தது யார் ?
எங்கே எமக்கான ஈழம்
எரித்தது யார் ?
என்னை நானே
கசக்கிப் பிழிந்து
வலியை அடக்கி
விழியை ஒதுக்கி
வழியில் நின்றே
ஒளியைப் பிடித்து
குழியில் கதறும்
ஒலியைக் கேட்டு
உதிரம் சிந்திய
உணர்வைப் பெற்று
உடலைக் கிழித்த
கணங்களைப் பொறுத்து
உயிரைத் தின்ற
போரை நினைத்து
வயிற்றைப் பிடித்து
மார்பில் அடித்து
நெஞ்சம் வெடிக்கக்
கதறுவது ஏன்
மழலை மொழியின்
பேச்சை உடைத்து
மாயம் பூண்டே
மனங்களை துடைத்து
மண்ணின் வீரக்
கர்ப்பம் தரித்து
வீரிய வேகம்
நடையினில் பதித்து
வீரம் பிறந்த மண்ணில்
விழுந்திங்கே தவிப்பது ஏன்
விடிவென்பது தமிழர்
மடிவதில் தானா ?
கதறுவதற்கா எம் உதடுகள் ?
எத்தனை எத்தனை
வலிகளை கடந்து
நித்தம் நித்தமாய்
செத்துப் பிழைத்து
இரத்த வாடை
நாற்றம் வீச
சதைப் பிண்டம்
தெருவில் சிதற
சிவப்பு ஆற்றில்
நீந்தும் நிலையோ எமக்கு ?
காலை இழந்து நொண்டியாகி
கையை இழந்து முடமாகி
உடல்க்கூறிழந்த ஜடமாகி
சாவின் விளிம்பின்
கபாடம் திறந்து
கண்களில் ஈரம்
வற்றியே போக
எம்மை கண்டிடும்
கண்கள் இல்லையா இங்கு ?
தோட்டாச் சன்னங்களோடும்
வெடிகுண்டின் ஒலிகளோடும்
இறப்புகளோடும் இழப்புகளோடும்
எமக்கான விடிவு
மடிவதில் தான் என்ற
உண்மையோடும் புன்னகையோடும்
வாழப் பழகிக் கொள்ளுங்கள்
வன்னியூர் கிறுக்கன்