ஈழத்து விதவைத் தாய்..!
ஏளனம் செய்யாதீர்கள்..
அவர்கள் சபிக்கபட்டவர்கள்
அல்லர்!
சரணடையாமல்
சண்டையிட்ட மாவீரத்தின்
சாட்சியங்கள்..
உயிரை கொடுத்து எதிரியை உருக்குலைந்தவனின் தாரமவள்,
அவளை எள்ளிநகையாடாதீர்கள்..
மனித பிறவிகள் என்றவகையில்
உங்களைப்போலத்தான்
அவர்களும் அவர்களை
அலட்சியம் செய்யாதீர்கள்..
தடுப்பில் நின்று வந்ததால்
அவள் தரங்கெட்டவள் அல்ல!
அவளை தரங்கெட்ட வார்த்தைகளால் தாழ்த்தி பேசாதீர்கள்…….
தடுப்பில் நின்று வந்தனிதானே
உனக்கு இந்த மாப்பிள்ளை காணும்
என்னும் உங்கள் வரையறையை தூக்கி குப்பையில் எறி(ரி)யுங்கள்..
அவர்களின் இந்தநிலை(இழிநிலை)
உங்களுக்காகதான் …
உங்கள் சுதந்திர வாழ்வுக்காகத்தான் என்பதை மறவாதீர்கள்..
காணாமல் போன கணவனை தேடிலைகிறாள் …..
அவளை காமத்திற்கு அலைபவளாக சித்தரிக்காதீர்கள்!
வெளிநாட்டு காசில் வியர் குடித்துவிட்டு வீதியோரம் கிடக்கும் ஊதாரி கணவனை கட்டியவள் அல்ல அவள்..
தம்மை அழிக்கவந்த எதிரியை அழிக்க தன்னுயிரை கொடையாக கொடுத்தனுக்கு வாழ்க்கைப்பட்டவள் அவள்..
படலை திறக்க பயந்தவனுக்கு பாய்விரித்தவள் அல்ல அவள்…
கடலை கடந்தும் இலக்கை வீழ்த்திய கணவனை கரம்கோர்த்தவள்..
அவர்கள் இருக்கும்போது இப்படியில்லையே,
அவர்கள் இருக்கும்போது
இப்படி நடக்கவில்லையே,என்று முணுமுணுக்கும் உந்த வாயால் எப்படி வசைபாட முடிகிறது..
முதலும் போராடினாள் எதிரியோடு,
இப்பவும் போராடுகின்றாள் வாழ்க்கையோடு
அவளை வாழவிடுங்கள்…..
தன்மானத்தோடும்
தலைவர் தந்ததுணிவோடும்
பெற்ற பிள்ளைகளுக்காவது
வாழவேண்டுமென்று எண்ணுகின்றாள் அவளை வாழவிடுங்கள்..
அத்தனையும் நாட்டுக்காக இழந்து
நிர்க்கதியாய் நிற்கின்றாள்
அவளை வாழ்த்தவில்லை
என்றாலும் வசைபாடாதீர்கள்..
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
பிரபாசெழியன்.