இன வலியை மறக்காது இளையவர்க்கு
கொடுப்போம்
******************************************
தானைத் தலைவனின் நெற்றிப் பொறியிலே நெருப்பெனப் பிறந்தவர்கள்
தாயின் முலைதனில் ஊறும் பாலிலும்
விடுதலை வீரம் குடித்தவர்கள்
ஊரும் தெரிந்திட ஊறும் விடியலின்
உருவாய் சிரித்தவர்கள் -இவர்
யாரும் அறிந்திடா யாகத் தீயிலே
தம் தேகம் எரித்தவர்கள்
ஆலம் சுமந்தவன் ஆடும் சிவன் கூட
இவன் வேரைத் தெரிந்ததில்லை -பல
வேழம் நிகர்த்தவன் வேங்கைதலைமகன்
விழி நீரைச் சொரிந்ததில்லை
ஈழம் அழிந்ததை மெல்ல மறந்தது
பொங்கும் பெரும் நிலமே -அட
கோலம் இழந்தது கொள்கை பறந்தது
போதையில் நம் இனமே
யாகத் துடிப்பிலே வேகம் ஒரு போதும்
தேசம் படைக்கவில்லை -எம்
சோகத் தடங்களை மீட்டித் தருவது
விழி நீரைத் துடைக்கவில்லை
இனக் கோபம் கடத்திடும் தேவை இருப்பதால் தாகம் அடங்கவில்லை -அட
சாகப் பயந்திடும் சந்ததி வாழ்வதே
இன்று ஆகப் பெரும் கவலை
ஆகச் சிறந்தவர் ஆளப் பிறந்தவர்
அறிவைப் பெருக்கிடுவோம்-எம்
தாகக் கனவினை ஈழக் குழந்தைகள்
உடல் சேரக் கொடுத்திடுவோம்
நன்றே தலைமுறை நம் நிலம் ஆண்டிட
நமை நாமே எரித்து கொள்வோம்
இன்றே கடத்துவோம் இனிய தமிழ் பெயர்
இப்போதே சூட்டிக் கொள்வோம்.
……கவிப்புயல் சரண்…..