ஆபத்தாய் வாழ் அதுவே தமிழ் வீரம்
செங்களத்தோர் வாசல் திறந்திருக்கும் வேளை தனில் பொங்கு களம் அதிர மங்களப்போர் பாடு
நம்குலத்தோர் வாழ்விற்கு மங்கல் வரும் நாளில் ஓங்கு தமிழ் கொண்டு வெங்களத்தில் தேர் ஓடு
சங்கத்தமிழ் தந்த மங்காப்
பெரு வீரம் ஓங்கு திசை எங்கும்
தேங்கி ஒலித்திடட்டும்
வங்கக் கடல் தந்த வல்லமைத் திருவுருவம் வாழும் திசை நோக்கி
வரலாறு உயர்ந்திடட்டும்
ஒற்றை தலைவன் அந்த
ஒளியின் தீபமகன் வேற்றுக்
கிரகம் தனில் வெளியேறி விடவில்லை
கற்றை வரி கொண்ட காவல் திருமகனே
கொற்றப் பெரு நெருப்பாய் கொழுந்து விட்டு எரிகின்றான்
உற்ற தமிழ் இனத்தின் மொத்த உருவமதாய் மேன்மை கொள்கின்றான்
மெத்தப் பெரும் செல்வம் சொத்தாய் நெஞ்சமதில் சுழன்றே இருக்கின்றான்
ஆபத்தாய் வாழ் தமிழா அதுவே மற வீரம்
ஆகாயம் இடிந்தாலும் அழுதிடாத் தமிழ் மானம்
வேங்கை வரும் நாளில் வேகம் தான் பெரும் சேவை
காங்கை சுமந்து நில்லு காலத்தின் களத் தேவை
….கவிப்புயல் சரண்…..