தேசியத் தலைவரின் தன்மையின் ஆழம்..!
தனிமனித ஒழுக்கம் அரவணைப்பு, பழக்கவழக்கங்கள் என்பவற்றை உலகில் ஒரு மனிதனில் பார்க்க முடியும் என்றால் அந்த ஒற்றை மனிதன் தலைவர் பிரபாகரன் என்பதில் சந்தேகம் இல்லை அவ்வாறு உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உலக வரலாற்று ஏடுகளை தட்டி பாருங்கள். ஒரு மனிதனின் தன்மையை அறிய வேண்டும் என்றால் அவரின் வீட்டிற்கு விருந்தோம்பலுக்கு செல்ல வேண்டும், அவரின் விருந்தொம்பலில் தன்மையை கணிப்பிடலாம் என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த இலக்கிய பொக்கிசத்தை நேரில் பார்க்கும் பாக்கியத்தை ஈழத்தமிழர்களுக்கு காலம் வழங்கியிருந்தது குறிப்பாக போராளிகளுக்கு. அந்த சிறிய வரலாற்றில் ஒரு சிறிய பக்கத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.
அது 2000ஆம் ஆண்டு காலப்பகுதி என்று நினைக்கின்றேன் சரியாக நினைவில்லை தலைவர் பிரபாகரன் அவர்கள் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவேளை கேணல் சங்கர் அண்ணா அலுவலாக வந்திருந்தார் தலைவரை சந்திக்க. அப்போது தலைவர் மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சங்கர் அண்ணா வந்ததும் ‘அண்ணை மாம்பழம் சாப்பிடுங்கோ’ என்று கூற அவரும் சாப்பிட்டார். மாம்பழம் நல்ல சுவையாக இருந்தது. சங்கர் அண்ணையும் நல்ல சுவையாக இருக்கின்றது எனச் சொல்லிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது மனவோட்டத்தை புரிந்து கொண்ட தலைவர் ‘மற்றப்பழத்தையும் சாப்பிடுங்கோ அண்ணை’ என்றார். சங்கர் அண்ணை சாப்பிடத் தொடங்க அண்ணை பாதுகாவலர்களிடம் ‘இன்னுமொரு மாம்பழம் ஒன்று வெட்டிவாங்கோ’ என்றார். உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்த அவர் ‘மாம்பழம் முடிந்து விட்டது’ என்றார்.
சங்கர் அண்ணை முகம் சற்று மாறியதை கவனித்த தலைவர் உடனேயே ‘சரி, வாழைப்பழம் எடுத்துவாங்கோ’ எனக் கூற அவர் அதுவும் முடிந்து விட்டது என்றார். சங்கர் அண்ணை சங்கடப்படுவதை உணர்ந்த தலைவர். ‘சரி தம்பி’ என்று அந்த சம்பாசனையை முடித்துக் கொண்டார். பின்னர் சங்கர் அண்ணையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கதைத்து அவருக்கு மனச்சங்கடம் இல்லாமல் வேறு வகையில் அவரை சந்தோசமாக அனுப்பி வைத்தார்.
பின்னர் அன்று மாலை தலைவர் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவேளை சம்பந்தப்பட்ட போராளி தலைவருக்கு முன்னால் சென்றார். ‘தம்பி இங்கை வாங்கோ’ என அப்போராளியை அழைத்து காலையில் நீங்கள் நடந்து கொண்டு முறை சரியா?’ எனக்கேட்டார். அவரும் எது என்று தெரியாமல் விழிக்க, தலைவர் சொன்னார் ‘காலையில் பழம்; கொண்டு வாங்கோ என்று சொல்ல, நீங்கள் சங்கர் அண்ணைக்கு கேட்கக்கூடியவாறு பழம் முடிந்து விட்டது என்று சொன்னீர்கள்.
அப்படி சொல்லியிருக்கக்கூடாது. ஏனென்றால் எனக்குரிய உணவை தான் சாப்பிட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி சங்கரண்ணைக்கு ஏற்பட்டதை அவரின் முகமாற்றத்திலிருந்து அறிந்து கொண்டேன். உணவு பரிமாறும் போது விருந்தினர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளவும் உணவு பரிமாறிமாறவும் பழகிக் கொள்ளவேண்டும். இனிமேல் இப்படியான தருணங்களில் நான் கேட்கும் உணவு முடிந்து விட்டால், ஒரு ஒற்றையில் எழுதித்தாருங்கள் நான் அதைப் புரிந்து கொள்வேன் அவர்களிற்கும் தர்மசங்கடம்; ஏற்படாது’ என்று சொன்னார்.
இந்த சிறு துளி வரலாற்று குறிப்பு எவ்வளவு பெரிய ஒரு அடித்தளத்தை காட்டி நிற்கின்றது. அந்த வரலாற்று அடித்தளத்தில் இருந்து வந்த நாம் எத்தனை பேர் அந்த அடித்தளத்திலருந்து வந்த தன்மையோடு இருக்கின்றோம் என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டு பாருங்கள். எப்போது சுயநலம் எனும் முகமூடியை அணிந்தீர்கள் என்பது தெரியும்.
ஈழம் புகழ் மாறன்.