ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் – பாகம் 16
எனது அனுபவம் 1982-1989
தாயக விடுதலை நோக்கிய பயணத்தின் (பகுதி 16)*
அன்று மாலை 4 மணியளவில் போராளிகளில் 10 பேர் உணவுப் பொருட்கள் எடுத்துவர ஏரியாவிற்குப் புறப்பட்டார்கள். நாங்கள் முகாமில் மற்றைய போராளிகளுடன் இருந்தோம்.
1989.04.07 ம் திகதி நான் இணைந்து இரண்டாவது நாள். இரவு உணவை முடித்தபின் பொறுப்பாளரான வரதன் அண்ணா வந்து எங்களுக்கு சில முக்கியமான விசயங்களைச் சொன்னார். அதில் நாம் இருக்கும் காட்டுப்பகுதிக்கு இந்திய இராணுவம் இறங்கியுள்ளனர் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் போராளிகளில் 10 பேர் ஏரியாவிற்குப் போய்விட்டதால் ஆட்கள் பற்றாக்குறை அதனால் நீங்கள் சீனியர் போராளிகளுடன் கலந்து இரவு சென்ரி பார்க்க வேண்டும் என்று கூறி எங்களை பிரித்து சீனியர் போராளிகளுடன் சேர்த்து விட்டார்.
அன்று இரவு இருவராகச் சென்றி பார்த்தோம். இராணுவம் காட்டிற்குள் இறங்குவது எப்படி இவர்களுக்குத் தெரியும் என்றால் அந்த நேரத்திலிருந்தே இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தின் தொலைத் தொடர்புகளை (மொனிடரிங்) இடைமறித்து களவாகப் பதிவு செய்வார்கள். இது எதிரிகளுக்குத் தெரியாது. அந்தளவிற்கு திறமையான போராளிகள் இருந்தனர். பெயர் விபரங்களைக் குறிப்பிடவில்லை ஏன் எனில் சிலர் வீரச்சாவடைந்து விட்டார்கள் அவர்கள் பெயரை வெளியிடுவதில் பிரச்சினை இல்லை. சிலர் இன்னும் தாயகப்பகுதியில் நடைபிணங்களாக வாழ்கின்றனர் சிலர் 2009 ம் ஆண்டு வெள்ளைக் கொடியுடன் வந்து எதிரியால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தளபதிகளாக இருந்தவர்கள் நினைக்கையில் வருத்தமாக உள்ளது.
இரவில் ஏதும் நடக்காது ஆனால் அதிகாலையில்தான் எதிரிகள் எம்மீது தாக்குதல் நடத்துவது வழக்கம். நாம் அதிகாலை 4.45 மணிக்கு எல்லோரும் எழும்பி நிலையெடுபில் இருந்தோம். காலை 7 மணியளவில் எமது முகாம் அமைந்திருந்த இடத்திலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் மான்கள் மற்றும் குரங்குகளின் கத்தல் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டவண்ணம் இருந்தது. அதை அவதானித்த சீனியர் போராளிகள் எல்லோரும் அலெட்டாகி தங்கள் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்து சந்தோசத்தில் இருந்ததைப் பார்த்து எனக்கு சந்தேகம் வந்தது என்னோடு நின்றவர்களிடன் கேட்டேன். அவர்கள் இன்று எமக்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டைவரப்போகிறது நான் உங்களுக்கும் எனது ஆயுதத்தால் சுடுவதற்கு தருகிறேன் குறிபார்த்துச் சுடுங்கள் என்றார் ஒரு போராளி (குறிப்பு அந்தப் போராளி பின்னர் ஒரு தாக்குதல் சம்பவத்தில் வீரச்சாவடைந்துவிட்டார். கப்டன்ஜெகன்* அவருக்கு எனது வீரவணக்கம்*) அவரின் கதையைக் கேட்டதும் எனக்கு பயம் கொஞ்சம் வந்துவிட்டது. நான் பயிற்சியும் எடுக்கவில்லை எப்படி சண்டைபிடிப்பது என்றுகூட தெரியாத நிலை அத்துடன் நான் இணைந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தது.
காலை எட்டு மணியளவில் எமது முகாமிற்கு மிகவும் அருகாமையில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் காடுகள் முறிந்து யானைகள் போவது போன்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒருவித துர்நாற்றமும் வீசியது. எனக்கு அந்தத் துர்நாற்றம் ஏற்கனவே பழக்கப்பட்டது ஏன் என்றால் இந்திய இராணுவத்தினரால் பலதடவைகள் அடி, உதை பட்டதில் அந்த மணம் தெரியும். நாங்கள் இன்னும் தயார் நிலையில் இருந்தோம்.
அரைமணிநேரம் கழிந்ததும் ஓ.பி. நின்ற போராளி வெளிப்பிரதேசத்தை அவதானித்துப் பார்த்துள்ளார். வெட்டைவெளிப்பகுதியால் இந்திய இராணுவத்தினரும் ஒரு சில தமிழ் ஒட்டுக் குழுவினரும் போய்கொண்டிருந்துள்ளனர் அதைப்பார்த்துவிட்டு பொறுப்பாளர் வந்து சொன்னார் அவர்கள் தங்கள் முகாம் நோக்கிப் போய்க்கொண்டிருகின்றார்கள் நீங்கள் அனைவரும் அவதானமாக இருங்கள் என்றார்.
பின் மொனிற்டரிங் செய்பவர் உறுதிப்படுத்தினார் இராணுவம் முகாங்களுக்குப் போய்விட்டனர் என்று அதன்பின் காலை 11 மணியளவில் நிலையெடுப்பிலிருந்து வந்து போராளிகளில் ஒரு பகுதியினர் எமது முகாமைச் சுற்றி (கிளியரிங்) தேடுதல் செய்யப் புறப்பட என்னையும் பொறுப்பாளர் அவர்களுடன் செல்லும்படி உத்தரவிட்டார். எனது கையில் எந்தவித ஆயுதங்களும் இல்லை நானும் அவர்களுடன் போனேன் சற்றுதூரம் போனதும் படையினர் சென்ற தடங்களைப் பார்த்து அவர்கள் போய்விட்டதை உறுதிப்படுத்தினர். பின் நாங்கள் அனைவரும் முகாம் வந்து காலை உணவு அன்று இல்லாத்தால் தேனீர் மட்டும் அருந்திவிட்டு எமது கொட்டிலில் இருந்தோம்.
பிரச்சினை காரணமாக அன்று மதியம் தாண்டியே சமையல் தொடங்கியது. மாலை 4 மணியளவில் காலை, மதியம், மற்றும் இரவு மூன்று நேர உணவைவும் ஒருநேர உணவாக உன்டோம். சில நேரங்களில் இந்த உணவுகூட கிடைப்பதில்லையாம். எனக்கு இது புதிய அனுபவம் இல்லை பல நாட்கள் நானும் அப்பாவும் பட்டினி கிடந்துள்ளோம். எனது முன்னைய பதிவில் எழுதியுள்ளேன். நல்லா வயிறு நிறைய சோறும் பருப்புக்கறியும் அமுதம் என்று நினைத்து சாப்பிட்டேன். நாளை எப்படியோ சாப்பாடு கிடைக்குமோ இல்லையோ.
ஏரியாவிற்குச் சென்றவர்களுக்கு வோக்கி ஊடாக சில கோட் வேர்ட் சொற்களைப் பயன்படுத்தி பொறுப்பாளர் தகவல் கொடுத்தார். அவர்கள் மறுநாள் காலை வரவேண்டியவர்கள் இரண்டு நாள் கழித்து வரச் சொல்லி தகவல் கொடுத்தார். நாங்கள் இரவானதும் இருவராக சென்ரி போட்டு உறங்கினோம். அன்று இரவு முழுவதும் எனக்கும் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நித்திரை வரவில்லை. ஒருவிதமான பயமான மனநிலையில் இருந்தோம். ஆனால் யாரும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. தொடரும்…………..
நன்றி.
வே.சுபாஸ். தமிழீழம்.
பாகம் 01 பார்வையிட
பாகம் 02 பார்வையிட
பாகம் 03 பார்வையிட
பாகம் 04 பார்வையிட
பாகம் 05 பார்வையிட
பாகம் 06 பார்வையிட
பாகம் 07 பார்வையிட
பாகம் 08 பார்வையிட
பாகம் 09 பார்வையிட
பாகம் 10 பார்வையிட
பாகம் 11 பார்வையிட
பாகம் 12 பார்வையிட
பாகம் 13 பார்வையிட
பாகம் 14 பார்வையிட
பாகம் 15 பார்வையிட