புலியென உறுமும் எம் தேசம்
தாய் நிலத்தில் காந்தள் மலர் கண் திறக்க தொடங்கி இருக்கும்
கார் மேகம் நீர் மலர் தூவி கல்லறையை நீராட்டி இருக்கும்
மண் நனைந்து மாவீரம் முளை கொண்டிருக்கும்
பறவைகள் ஈழத்தை வரைந்த படி
வானில் பறந்து திரியும்
காற்று எங்கள் கொடிகளுக்காய்
காவல் இருக்கும்
நாற்று வயல்கள் எல்லாம் நாரைகள்
தவம் கிடக்கும்
ஆற்றாத் துயர் சுமந்த இனம் தமை தேற்றித் தலை நிமிரும்
தோற்ற இனமல்ல நாம் என்பதை
கூற்றாய் குறித்து நிற்கும்
ஆனாலும்.
உற்ற பெரு நிலத்தில்
ஒற்றைக் கவலை ஒன்றே
எமை ஒடுக்கிக் கொல்கிறது
கற்றை வரி உடுத்திக்
காற்றை கையிருத்தி
நெற்றிக்கண் திறக்கும்
கொற்றப் பெருவீரன்
ஒற்றை வரி கேட்க
இற்றை வரை எம் தேசம்
உறு மீன் வரும் வரைக்கும்
வாடிய கொக்கினமாய்.
.கவிப்புயல் சரண்.
Share this: