“பார்த்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள்……”
கொடியபோரும் கொட்டமடித்த
இயற்கையையும் கூறுபோட்ட மிச்சங்கள்…
எங்கள் கைகளைப்பற்றி நிற்கின்றன..
எங்களையும் வாழ வழிசெய்யுங்கள் என்று…
வடுக்கள் கூட ஆறாத வாழும் புருசர்கள்…
எங்கள் வலிகளை இன்னமும்
சுமக்கும் யேசுபிரான்கள்..
இவர்களைப் பாவமென்று
சொல்வோருமுளர் திரும்பக்கூட
பாராதிருப்போர் எம்மில் பலர்…- எங்கள் பாரச்சிலுவைகளைச் சுமந்தவர் இவர்
பரிதாபத்துக்குரியவர்களல்ல மாறாகப்
பார்த்துக்கொள்ளப்படவேண்டியவர்ள்..
கனவுகளைச் சேர்த்து வைத்த இவர்
கண்களில் நீரை துடைத்து
விடவேண்டியவர் யார் ?..
யாரென்றால் யாவரும் தான்…
போரென்று சொல்லிப்
புதுவாழ்வமைத்த எல்லோரும்
பொறுப்பாளிகள்தான்
பொன்னுக்கும் பொருளுக்கும்
போகிறபோக்கில் வாழ்வுக்கும்
வேண்டிநிற்கவில்லை…
கண்ணுக்குள் நிற்கும்
கனவுகளைத் தொலைக்காமல்..
திண்ணத்தை மனதில் வைத்து
வாழும் சாட்சியங்கள் – இவர்
புண்ணுக்கு மருந்தும் புசிக்க
உணவும் கொடுக்கமுடியா
பண்பற்றவர்களா நாம்..?
சிந்திக்கவேண்டியது….
கனவைவிரிக்கும் எண்ணப்பறவைகளின்
வண்ணச் சிறகிற்கு சின்ன
இறகாயேனும்நாமிருப்போம்…
காலம்வென்றும் காலூன்றத்துடிக்கும்
இந்தக்காலச்சிற்பிகளைக்
கைகோர்த்து வழிநடப்போம்…”
-காந்தள்-