ஈழ மெளனம்…
உணர்வுகளைக் கட்டிப் போட்ட
இன்றைய ஈழத்தின் பாசக் கயிறு
இந்த மெளனம்.
உள்ளுக்குள் அழுதபடி நின்று
வெளியில் சிரித்து வாழும் தேச உயிர்
இந்த மெளனம்.
புலிக்குப் புல்லைக் கொடுத்து
விதி மாற்ற முயலும் உலகின்
கலியுகப் புராணம் இந்த மெளனம்.
விழிகளை இருட்டாக்கி
விசைகளை மெதுவாக்குகிறது
இரத்தம் தோய்ந்த இந்த மெளனம்.
யாரை யார் நோவது
மெளனம் ஈழ வாழ்வில் இன்று
கும்பகர்ணத் துயில் கொள்கிறது.
கத்தி எழுப்பவும் முடியவில்லை
குத்தி எழுப்பவும் முடியவில்லை
சத்திழந்த நாக்குகளின்
பட்டி மன்றம் தான் நீள்கிறது.
ஆங்காங்கே திசைகளில் கிடந்த படி
கடந்து போன சாதனைகளை
இரை மீட்கிறது இந்த மெளனம்.
முச்சை அறுந்த பட்டமாய் சுழன்றடித்துக்
குத்திக் கிழிகிறது இந்த மெளனம்.
இறுதியாய்த் தமிழருக்கு ஈழம் தந்த
காத்திருப்புக் காவியம் இந்த மெளனம்.
குருதி தோய்ந்த கனவுகளையும்
குனிந்து வாழா உணர்வுகளையும்
சிறையிட்டுத் தூக்கிலிடத் தேதி தேடுகிறது
தொடராய் நீண்டு போகும் இந்த மெளனம்….
கலைப்பரிதி.