அன்புள்ள தோழிக்கு…..
எந்தன் கனவுகளில் எல்லாம்
உந்தன் நினைவுகளே
இன்றைக்கும்
தொடர்ந்த வண்ணம்
ஒரு காலத்தின்
சம வெளியில்
தேசத்துக்காய்
போராடிய கணத்தில்
உன் பாசத்துக்காய்
ஏங்கிய நினைவில்…
வீசும் காற்றின் வேகத்தையும்
வீழும் ஏறிகணை தூரத்தையும்
இலகுவில் கணிப்பவள் நீ
காப்புக் கொடுக்கும்
கருங்காலி மரங்கள்
எல்லாம் உன்னை கண்டு
கண் பிதுங்கி நிற்கும்
உன் காப்புச்சூட்டின்
திறம் கண்டு
வெற்றிகள் தேடி எங்கள்
வேங்கை வழி நடந்த காலத்தில்
எனைப் பற்றிடும் ஆர்வத்தில்
உந்தன் கால்கள் நடந்ததும்
பாரிய வெற்றி ஒன்றே
யுத்த முனையில்
காளிக்கு நிகராகவும்
காப்பரணில்
மெல்லிய பூவாயும்
எப்படி உன்னால்
உரு மாற முடிந்தது
வெட்கத்தில் மூழ்கிய
காந்தள் மலரே
வேட்கையில் நீயும்
தாய்மைப் புலியே
வெங்களப் படை தகர்க்க
வீசிடும் கணையும் நீயே
உச்சமாய் சண்டை செய்வாய்
மிச்சமே காதல் கொள்வாய்
கண்களால் கதைகள் பேசி
கண்களால் பதிலும் சொல்வாய்
வார்த்தைகள் குறைவு உந்தன்
வாய் வழி கேட்டதில்லை
பார்வைகள் தேடித்தேடி
பக்குவக் காதல் கொண்டாய்
வித்துடல் வீழும் என்று
கனவிலும் நினைத்ததில்லை
வெற்றிகள் சூழ்ந்த நிலம்
வேட்கையை இழந்தது போல்
வீழ்ந்தாய் நீ காயம் பட்டு
வலித்தது எந்தனுக்கே
பூவென உன்னைத் தாங்கி
பின் தளம் அனுப்பி வைத்தேன்
திரும்புவாய் என்று எந்தன்
உள் மனம் கூறியது
விதியினை வெல்வோர் யாரோ
விதையென ஆகி விட்டாய்
நினைவுகள் என்னில் வாழ
நீ தந்த உறவு போதும்
பிரிவுகள் சேர்வதெல்லாம்
பிரிந்துமே என்னில் வாழும்
புதியதோர் உறவு தந்தாய்
புதியதோர் உணர்வு தந்தாய்
புதியதோர் உறவில் உன்னைப்
புகுத்தியே வாழ்த்திடுவேன் ….
..கவிப்புயல் சரண்…